Tuesday, December 26, 2006

Caste & Class2

நான் ஓர் வெள்ளாளன்
நான் ஓர் பிராமணன்
நான் பள்ளிக்கூடம் போற பெடியன்.
-ஹரிஹரஷர்மா-
முன் பள்ளி வகுப்பில் கல்வி கற்க நான் அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை. எந்தப் பஞ்சமர்களுடனும் நான் சேர்ந்து விடக்கூடாதென்ற முன்னெச்சரிக்கையாலும், வேறு சில குடும்ப பொருளாதார சூழ்நிலைகளாலும் அம்மா என்னை அங்கு சேர்க்கவில்லை. பனங்கிழங்குகளை கிண்டியபடி வேர்க்க விறுவிறுக்க அவள் சொல்லித்தந்த ஆனா ஆவன்னா தான் எனது முன்பள்ளிப் பாடங்கள். அம்மாவிடம் தன்னைக் கைவிட்டுச் சென்ற அய்யனுக்கெதிராக (அப்பாவுக்கு) என்னை வளர்த்து ஓர் பிராமணனாக-பத்ததி (சமஸ்கிருதத்திலும் குருகுலக் கல்வியிலும் உயர்தகுதி பெற்ற பிரம்மஸ்றீ பிராமணர்கள் மாத்திரம் சொல்லக்கூடிய பிரார்த்தனை) வாசிக்கிற பிராமணனாக-எடுத்துவிட வேண்டுமென்ற வெறி இருந்தது. அப்போதெல்லாம் அம்மா எனக்கு முன்னுதாரணங்களாய்க் கூறியது கோப்பாய் சிவம் என்கிற ஒரு பிராமணரின் புத்தகங்கள், இலங்கை வனொலியில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஹரிஹரஷர்மாவின் குரல் என்பவற்றைத்தான். வேறெந்தக் கனவுகளையும் என்னுள் கிளர அம்மா அனுமதித்ததில்லை. பனங்கொட்டைகளை பொறுக்கி கடகத்திலிட்டபடி, புகையும் அடுப்பை ஊதியபடி, இடியப்பம் புழிந்தபடி இவர்களைப் பற்றிய உயர்வான புனைவுகளை அம்மா சொல்லிக் கொண்டிருப்பாள். கயத்ரி மந்திரத்தை சொல்லிமுடித்த மாலைப் போதொன்றில் அவள் கூறினாள்; 'நாளைக்கு உனக்குப் பள்ளிக்கூடம். ரயில்வேப் பொடியள், நளச்சிணியள் (எங்கேயோ இருந்து இடம்பெயர்ந்த வந்த பஞ்சமர்கள், கைவிடப்பட்ட பாழடைந்த ரயில்வே குவார்ட்டர்ஸ்களில் தஞ்சமடைந்திருந்தனர். அவர்களது பாவனைக்கு கோவில் கிணறு மறுக்கப்பட்ட பின்னர் அசுத்தமான ரயில்வே கிணற்று நீரை அவர்கள் பருகினர்.) எல்லாம் வருவாங்கள். அவங்கள் ஆரோடயேனும் சேந்தாயெண்டு கதை வந்துது... அம்மா உனக்கு இல்லை சரியோ, நீ கோமதி மாமின்ர பொடியனோட மாத்திரம் சேர். சாப்பிடேக்க சாப்பாட்டுப் பெட்டிமூடியால மறைச்சு வைச்சுத் தான் சாப்பிட வேணும்-நீ பிராமணன்! ஏதாவது திருகுதாளம் பண்ணினாய், எனக்கு வந்து சொல்ல ஆக்கள் இருக்கினம் சரியே.'


பாடசாலையில் முதல்நாள் எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது-நான் பயப்பிட்டுக் கொண்டிருக்கவில்லை. எல்ல ஆசிரியர்களும் நான் அப்பாவைப் போலவே இருப்பதாய் அம்மாவிடம் கூற அவள் 'கைப் புண்ணுக்கு கண்ணாடி வேணுமோ' எனக் கேட்டுக் கொண்டிருந்தாள். அம்மாவும் மூன்று நான்கு வெள்ளாளப் பெண்மணிகளும் நின்றுகொண்டிருந்தனர், பென்ச் அழுக்கானது என என்னையோ அல்லது அவர்களது பிள்ளைகளையோ அப்பக்கம் அண்டவிடாது பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. பெத்தா அதில் தான் உட்கார்ந்திருந்தாள். அவள் வீ.சீயில் துப்பரவு வேலை செய்பவள். அவர்கள் கதைத்துக் கொண்டிருந்தார்கள்; 'பெத்தான்ர பிள்ளையும் பள்ளிக்கூடத்தில சேருதே....! கடவுளே கலிகாலம்'. பெத்தாவை நான் பார்த்தேன் - கறுப்பு. 'எவனுக்கோ ஈணப்போறாள், வயித்தப் பார்..' சிரித்தார்கள். ஊத்தை பென்ச்சில் அமர்த்திருந்த பெத்தா ஒருமுறைதானும் இப்பக்கம் திரும்பிப் பார்த்தாளில்லை.. அளவுக்கதிகமாக நீலம் போடப்பட்டு ஊத்தைகள் வடிவாக எடுபடாமல் இருத்த சீருடையை பெத்தாவின் மகன் அணித்த்ருத்தான். அவன் என்னைபோல சப்பாத்து அணித்திருக்கவில்லை. கால்களை அடிக்கடி சொறிந்த படி மூக்கில் புல்லாக்குப் போல தொங்கும் சளியை தாயின் சீலைத்தலைப்பில் துடைத்தபடி நின்றிருந்தான். அர்வருப்பாய் இருந்தது. அம்மா எல்லா படிவ நிரப்பல்களும் முடித்து என்னைக்கொண்டு போய் வகுப்பில் விடும் போது நான்கு பளபளப்பான மணவர்களைக் அறிமுகப் படுத்தினாள். என்னைப் போல மிகு வெண்ணிறச் சேட்டையும் மடிப்புக் குலையாத காற்சட்டையையும் அவர்கள் அணிந்திருத்தனர். வெளிநாட்டில் இருவருடைய அப்பாக்கள் இருந்தனர். அவர்கள் அழகான புத்தகப் பைகளை வடிவான பொம்மைக்குட்டி தண்ணீர்ப் போத்தல்களை வைத்திருந்தனர். நான் வட்ட வடிவிலான சாப்பாட்டுப் பெட்டி ஒன்றை வைத்திருந்தேன். எனது பளபளப்பான வெள்ளாள நண்பர்களும் விதவிதமான வடிவ சாப்பாட்டுப் பெட்டிகளை வைத்திருந்தனர். பஞ்சமர்கள் பெரும்பாலும் சாப்பாடு கொண்டுவருவதில்லை. அப்படியே ஓரிருவர் கொண்டுவந்தாலும் வனிதாமணி ரீச்சரிடம் வாழையிலைக்கும் பூவரசம் இலைக்கும் பேச்சு வங்குவார்கள். (அவர்கள் பூவரசம் இலைகளை வெகுநுட்பமாக உதயன் பேப்பரில் விரித்து அதன் மேல் புட்டையோ பாணையோ வைத்துப் பார்சல் கட்டிக் கொண்டுவருவார்கள். வனிதாமணி மிஸ் வகுப்பறைச் சுத்தம் பற்றிப் பெரிதும் அக்கறை கொண்டிருந்தவராதலால் அவருக்கு வாழையிலைகள் பூவரசம் இலைகள் வீசப்பட்டு அவற்றுக்கு காக்கைகள் வட்டமிடுவது குறித்து பெரும் அதிருப்தி இருந்தது.)
நாங்கள் (வெள்ளாள மாணவர்களையும் என்னையும்) முன்வாங்கில் இருந்தோம். பெண்பிள்ளைகளுக்காக ஒதுக்கப் பட்ட மறுபிரிவின் முன்வாங்கில் சுஹாசினி, யசோதரா, நிர்மலா போன்றோர் அமர்ந்திருக்க பின்வாங்குகளில் றபீக்கா, சொர்ணா, மேரி போன்றோர் அமர்ந்திருந்தனர். முன்வாங்கு பின்வாங்கு ஒழுங்கு ஆசிரியர்களால் மிகக்கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. கிறிஸ்தவம் படிப்பவர்கள் மாமர நிழலுக்குப் போய்விட வேண்டும். கிறிஸ்தவ ஆசிரியையின் தலையில் காகம் எச்சமிட்ட சம்பவம் பாடசாலை முழுதும் தெரியவந்த பின்னரும் கூட.
பவளம் ரீச்சரை கோயில்லில் சந்திக்கும் நேரமெல்லாம் அம்மா என்னைப் பற்றி விசாரிப்பாள். ' என்ன பவளம், பின்வாங்குப் பெடி பெட்டையளோட ஆள் கொண்டாட்டமே?'
பின்வாங்குப் பெடியள் கதைத்துக் கொண்டிருப்பதற்காக, குழப்படிகளுக்காக ரீச்சர்களிடம் அடிவாங்கியபடியே இருந்தார்கள். எங்களுக்கு அடியே விழுவதில்லை. ஏனெனில் நாங்கள் குழப்படி விடுவதில்லை. ஏனெனில் நாங்கள் முன்வாங்கில் இருந்தோம். அவர்கள் பிழைவாங்கியபடியே இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் பின்வாங்கில் இருந்தார்கள். நாங்கள் சரிகளையே அதிகம் வாங்கவும் விரும்பவும் செய்தோம். ஏனெனில் நாங்கள் முன்வாங்கில் இருந்தோம். ஏனெனில் நாங்கள் முன்வாங்கில் இருந்தோம். ஏனெனில் நாங்கள் இந்து உயர்வேளாள குலத்தினராகவும் பிராமணர்களாகவும் இருந்தோம்.
என்னைக் கள்ளப் பிராமணி என அழைக்கும் பழக்கத்தை பின்வாங்கு மாணவர்கள் கொண்டிருந்தனர். காரணம் இல்லாமலில்லை. அவர்கள் பக்கம் நியாயம் இருந்தது. அவர்கள் அடி வாங்கும் போதெல்லாம் நானும் என் வெள்ளாள நண்பர்களும் மிக மோசமாகப் பகிடி (பகிடியை விட வேறு ஏதாவது மோசமான வார்த்தைகளிருப்பின் அதை இவ்விடத்தில் ஒட்டி வாசிக்கவும்) செய்வோம். அய்ந்தாம் ஆறாம் ஆண்டுகளில் படிக்கும் போது இக்கிண்டல்கள் அதிகமும் பாலியல் சார்ந்தவையாக இருந்தன. 'பனைமரத்தில ஏறியிருந்த உன்ர கொப்பன்ர கு censored / 'உன்ர கொம்மா ஆமை றைச்சி திண்டிட்டு ஆமிக்காரனோட படுக்கிற வேcensored' என்ற வகையான கிண்டல்கள். அவர்களால் எங்களை -முக்கியமாக நோஞ்சானான என்னை- அடித்து நொறுக்கி விட முடியும். ஆனால் தவறுதலாய்க் கூட அவர்கள் என்மீது தொட்டதில்லை. வெள்ளாளச் சிறுவன் ஒருவனது பொன்மூக்கை இடைவேளையின் போது அவர்கள் உடைத்த சம்பவம் இன்றும் என் நினைவிலிருக்கிறது. இராணுவத்தினருடன் பஞ்சமர்களின் தாய்மாரை இணைத்துப் பேசியதாலேயே அது நடந்தது. ஆசிரியரிடம் அப் பனையேறிச் சிறுவனின் நியாயங்கள் எடுபடவேயில்லை. 'திருப்பிக் கதையாத' ஆசிரியர் திருப்பித் திருப்பி அவனுக்கு கூறிக்கொண்டிருந்தார். முதலில் அவனது விரல் மொளியைப் பதம் பாத்த வாத்தி பின்னர் மேசைக்குக் கீழாய் அவனைக் குனியச் செய்து பின்புறமாய் விளாசினான் - அவனிடமிருந்து எந்த அழுகையொலியும் வராதது வாத்த்யின் கோபத்தை மேலும் கூட்டிக்கொண்டிருந்தது. பெண்பிள்ளைகள் பேசாமல் இருந்தார்கள். ஆனால் நானும் எனது முன்வாங்கு நண்பர்களும் வாத்தியின் கிண்டல்கள் ஒவ்வொன்றுக்கும் உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தோம். தன்னுடைய பாடம் முழுதும் குறித்த மாணவனை முட்டுக்காலில் நிற்கும் படி வாத்தி கூறினான். நான் அவ்ன்பக்கம் ஒருமுறை பார்த்து நைக்காட்டினேன். அந்தக் கண்களை வாழ்நாள் பூராவும் நான் மறக்கமுடியாது. நீர் தளும்பி அழுகையை அடக்கும் கண்ணும் துடித்துக் கொண்டிருக்கும் சொண்டும்....
மறுநாள் இடைவேளையின் போது அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் வந்திருப்பதாய் ஆசிரியரொருவர் அழைத்துச் சென்றார். அவனது தாயார் அவனைப் பாடசாலைக்கு அனுப்பி வைத்து விட்டு மண்ணெண்ணை ஊற்றி தன்னைத் தானே எரித்துக் கொண்டதாய் பள்ளிக் கூடத்தில் பேசிக் கொண்டார்கள். பிறகு ஒருபோதும் நான் அவனைக் கண்டதில்லை.
***

2001 இடப்பெயர்வு என்னை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் சேரும்படி செய்தது. அம்மாவுக்கு வேதக்காரப் பள்ளிக்கூடம் என்பதில் பல அதிருப்திகள் இருந்தன தான் என்றாலும் வேறுவழியிருக்கவில்லை. ஆங்கிலம் கற்க மிக ஏதுவான இடம் எனவும் பஞ்சமர்கள் அதிகம் படிப்பது வட்டு சென்றல் போன்ற பள்ளிக்கூடங்களில் தான் எனவும் இங்கு அதிகம் கல்வி கற்பது கிறிஸ்தவ வெள்ளாளர்கள் தான் என்பதையும் உறுதிப்படுத்திய பின்னரே அரைகுறை மனதுடன் அம்மா அங்கு படிக்க அனுப்பினாள்.
"What was your school?"
"Palai Central College, Sir"
"Temporary Admission, No?"
"yes sir"
" What is your name?"
" My name is Hariharasharma sir"
"ஓ! அய்யராக்களா?'
'ஓம் சேர்'
'அய்யா, அப்ப சொல்லுங்கோ, பூணூல் போட்டாச்சே,'
வகுப்பறையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆசிரியர் டஸ்டரை கமில்ரனை நோக்கி வீசினார். ' டேய் கமில்ரன், நாயே.. எந்த நேரம் பார் கதை. கொப்பரும் கொம்மாவும் என்ன கத்திக் கொண்டே ஓcensored. வகுப்பறை சிரித்தது. எனக்கு உண்மையிலேயே விளங்கவில்லை. எனது முகக்குறியிலிருந்து அதைப் புரிந்து கொண்ட வாத்தி 'அய்யாவுக்கு விளங்காதுதான்' என்றான். பிறகும் 'அய்யா' எண்டான். எழுந்து நின்றேன். 'இருங்கோய்யா, இருந்து பதில் சொல்லுங்கோ' 'பூணூல் போட்டாச்சே'
'ம்ஹூம்.'
'ஏனய்யா? ஏழு வயசில போடவேணுமெண்டு சொல்லுவினம்?.."
'பதினேழு வயசிலயும் போடலாம் சேர். இனித்தான் போடோணும்' (பொய் சொன்னேன். உண்மையிலேயே 'அய்யா' அங்கீகாரம் எனக்குப் பிடித்திருந்தது. அதைக் குலைக்க நான் விரும்பவில்லை. உண்மையில் அப்பா-அம்மா கலப்பு மணம் குறித்த இரு சமூகங்களின் அங்கீகாரத்தினின்றும் என்னை புறந்தள்ளியிருந்தது. வெள்ளாளர்களும் ஒருவித வேற்றுமை உணர்வோடேயே என்னை ஏற்றுக் கொண்டனர். பிராமணர்கள் என்னை அங்கீகரிக்கவேயில்லை. அப்பா அம்மாவைக்கைவிட்ட போது அவரைப் பிரமச்சாரி என்று அக்கினிசாட்சி கூறிக் மறு கல்யாணம் பண்ணிவைக்கத் தயாராயிருந்த பிராமணிகள் எனக்குப் பூணூல் போட்டுவிடத் தயாராயிருக்கவில்லை - மனுநீதி என்னை பிராமணி என்று ஏற்றுக் கொண்டும்)

***

அம்மா யாழ்ப்பாணக் கல்லூரியில் எனது இருப்புக் குறித்து மிகவும் அதிருப்தியடைந்திருந்தாள். அவளது அதிருப்தி என்னை கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு மாற்றியது. கொகுவில் இந்துக் கல்லூரி அம்மாவை மிகவும் கவர்ந்த ஒன்றாக இருந்தது. மஞ்சவனப்பதி கோயில் - இரண்டு கட்டடத் தொகுதிகளுக்கு நடுவில் இன்னொரு முருகன் கோயில் - நல்ல சாதி பெடியள் படிக்கிற இடம் என அப் பாடசாலை குறித்து அலட்டிக் கொள்ள நிறைய விடயங்கள் இருந்தன. எனது ஆங்கிலம், நடை, உடை பாவனைகள் கொக்குவில் இந்துவில் என்னைச் சுற்றி ஒரு உயர்ந்த பிம்பத்தைக் கட்டமைக்க உதவின. திருநீறு பூசிக்கொண்டு போகவேண்டிய கட்டாயம் இருந்தது. தினம் தினம் பிரார்த்தனைக் கூட்டங்களில் தேவாரம் பாடிக் கொண்டிருந்தேன். பிரேயரில் கிறிஸ்தவ மாணவர்கள் எங்களது ஒன்றுகூடல் மண்டபத்தின் மூலையில் வந்து நிற்கும்படி விதிக்கப் பட்டிருந்தார்கள். சமயப் பாடத்தின் போது அவர்கள் லைபிறறிக்கு அனுப்பப் படுவார்கள்.
தமிழ்த்தினப் போட்டிகள் என்றால் எனக்கும் ஏனைய இந்து மாணவர்களுக்கும் சரியான வாசிதான். தலைப்புகள் எல்லாம் சமய இலக்கியங்கள் சார்ந்தே கொடுக்கப் பட்டிருக்கும் . விவாதமென்றால் அது மணிமேகலையா கண்ணகியா, சீதையா கண்ணகியா என்ற வட்டத்துள்ளேயே சுழலும். எப்பவாவது, தொழில்னுட்ப முன்னேற்றம் நம் சமூகத்துக்கு நல்லதைப் பண்ணுகிறதா இல்லையா தொனியில் ஏஎதாவது தருவார்கள். அதற்குக் கூட திருக்குறளில் இருந்தும் அங்கிருந்தும் இங்கிருதுமாய் மேற்கோள் காட்டி வென்றுவிட முடியும். தமிழ்த்தினப் போட்டியென்றால் இந்துக் கல்லூரிகளின் கும்மாளம் சொல்லிமாளாது. ஆங்கில தினப் போட்டிகளின் போது கூட யாழ் இந்துவும் வேம்படியும் கொக்குவில் இந்துவும் எப்படியோ பல முதலாமிடங்களை சுவீகரித்து விடுகின்றன. ஏனெனில் ஆங்கில தினப் போட்டிகளில் விவிலியம் சார்ந்த எந்தக் கட்டுரைகளும் கோரப் படுவதில்லை.
மிகக் கஷ்டமான உடல்செயற்பாடுகளைக் கோரிநிற்கும் ஒப்படைகளுக்காக நான் கோகுலனை வைத்திருந்தேன். சரியான விதத்தில் சேர்கிட்டுகளைப் பொருத்தி மின்னோட்டத் தொகுதி தயாரிப்பது. மோட்டாரில் இயங்கும் விளையாட்டு சுழலி செய்வது போன்ற விஞ்ஞானப்பாட ஒப்படைகளுக்கும் அவனை நம்பியிருக்க வேண்டிய காலம் வந்து விட்டதால் அவனை வீட்டு வரவேற்பறையினுள் அனுமதிக்க வேண்டிய அவலம் அம்மாவுக்கு வந்தது. மஞ்சள்த் தண்ணி கரைத்து ரெடியாய் இருக்கும் மாலைப்போதுகளில் அவன் வருவான். அவன் என்னிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதாக இருந்தது. அம்மா ஏதோ பெருமையில் அதற்கு ஒத்துக்கொண்டிருந்தாள். அதுவே ஒவ்வொருநாளும் அவனது வருகைக்கு வித்திட்டது. அம்மா மூக்குப்பேணிகள் இல்லாது போய்விட்டமைக்கு மிகவும் வருத்தப்பட்டாள். கோகுலனுக்கான ரம்ளர் சமயலறையின் மூலையில் கிடக்கும். பளையில் இருந்தபோது அம்மா இரண்டு மூக்குப்பேணிகளை வைத்திருந்தாள். அவற்றிலொன்று வேலிப்பூவரசம் கெட்டில் கவிழ்க்கப்பட்டிருக்கும். அது பன்ம்பாத்தி கிண்டவரும் பனையேறிக்குடியைச் சேர்ந்த முதியவளுக்கானது. மற்றையது மாதத்தில் மூன்று நாட்கள் தான் பாவிப்பதற்கு.

***
உயர் தரத்தில் எனது பாடத்தேர்வு (ஆங்கில இலக்கியம்) சார்ந்த காரணங்களால் யாழ்.மத்திய கல்லூரிக்கு மாறவேண்டி வந்தது. ஏகப்பட்ட பஞ்சமர்கள் கற்கும் (வெள்ளாளப் பாஷையில் 'காவாலிப் பள்ளிக்கூடம்'), ஒரு பஞ்சமரே அதிபராய் இருக்கும் பாடசாலை என்பதில் அம்மாவுக்கு படு எரிச்சல் இருந்தது. அம்மாவுக்கு எனது பாடங்களை வழங்கக் கூடிய யாழ் இந்து விருப்பமான ஒன்றாக இருந்த போதும் அதன் டொனேஷன் தொகை அப்பக்கமும் தலை வைக்க விடவில்லை.
நான் சேர்ந்த வருடத்தில் அதிபராய் இருந்து பின்னர் கொலையுண்ட அதிபர் இராசதுரை ஒரு பஞ்சமர். பல முற்போக்கான நடவடிக்கைகள் அவரால் பாடசாலையினுள் செய்யப் பட்டிருந்தன. முஸ்லிம் மாணவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே படித்த போதும் காலைப் பிரார்த்தனையில் அவர்களது பிரார்த்தனையும் இடம்பெறும். இஸ்லாமியப் பிரார்த்தனை, ஒளிவிழா, நவராத்திரி என சகல மதங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப் பட்டிருந்தது. மிகுந்த கண்டிப்புடைய வன்முறையாளரான அவர் என்னை ஒருபோதும் 'நீ' போட்டுக் கதைத்ததில்லை. (அவரால் கதைக்க முடிந்ததில்லை எனப்து மேலும் பொருத்தமானது) என்னை அவர் ஆங்கில யூனியனுக்கு தலைவராகப் பிரேரித்த போது 'அய்யாவோட ஸ்கில்ஸ் வந்து மார்வெலஸ். ஹி டிஸர்வ்ஸ் திஸ்' என்றார். எனது ஆங்கிலமும் சாதியும் அவரது அணுகுமுறைக்குக் காரணமாயிருக்கலாம் என்பது எனது ஊகம்.
'சர்மா, முந்தி எந்தப்பள்ளிக்கூடம்? ஏன் இஞ்ச வந்தனீங்கள்? இங்கிலிஷ்க்கு என்ன றிசல்ஸ். தமிழ் வாசிக்கிறது போல உங்களுக்கு இங்கிலிஷ் விளங்கும் என்ன?' இது தான் மாணவர்கள் என்னை எதிர்கொண்ட விதம். ஒ.எல் இல் கணிதத்துக்கு விசேடசித்தி வைத்துக் கொண்டு கலைப்பிரிவிற்கு வந்தது வேறு அவர்களிடம் விநோதமான மதிப்புணர்வைத் தோற்றுவித்திருந்தது. எனக்கு இதெல்லாம் வேடிக்கையாக இருக்கும். 'மச்சான் அந்தச் சரக்கு செம கட்டையடா... கோழி..' அது இதென்று கதைத்துக் கொண்டிருப்பவர்கள் என்னைக் கண்டதும் நிறுத்திக் கொள்வார்கள். நானே என்னைச் சுற்றிக் கட்டமைத்துக் கொண்ட இந்த ஒளிவளையம் மீது குற்ற உணர்வுடன் கூடிய அதீத பிரியம் இருந்ததைக் கட்டாயம் ஒத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களிடம் என்னைக் குறித்து ஆயிரம் கேள்விகள் இருந்தன. புறனிலையாளனாய் நின்று என்னையும் மாணவர்களையும் விளையாட்டாய் அவதானித்துப் பதிந்து கொண்டிருந்தேன் டயரியில். 'இரவில எத்தினை மணிகாணப் படிக்கிறநீர்' போன்ற கேள்விகளே அவர்கள் என்னிடம் கேட்க முடிந்த கேள்விகள். எனது உள்புதைந்த ஆளுமை காரணமாயும் குறைந்தளவிலான பாடசாலைப் பிரசன்னம் காரணமாயும் அவர்களுடன் நெருங்கித் தொடர்புற முடிந்ததில்லை. பாடசாலைக்கு சமூகமளிக்கும் நாட்களிலும் எதையாவது எழுதிக்கொண்டிருப்பேன். நான் ட்ரிப்பிள் எக்ஸ் பார்க்கிற ஆளா இல்லையா, வயதுக்கு வந்தவனா வராதவனா என்பதெல்லாம் அவர்களது முக்கியமான இடைவேளை அலசல்கள். சாடைமாடையாக மாத்திரமே அவர்கள் என்னைக் கிளறியதுண்டு. ஒருதடவை செல்போனில் பதிவுசெய்யப்பட்ட நீலப்படத் துண்டுகளைப் பின்வாங்கில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் வாசித்துக் கொண்டிருந்தேன். ஒருத்தன் 'என்ன ஐயா, எப்ப ஆம்பிளையாகிறது' என்று கத்தினான். நான் மையமாகச் சிரித்து விட்டு வாசிப்பது போன்ற பாவனையைத் தொடர்ந்தேன். அன்று விட்டுவிட்டார்கள். முன்திட்டமிடப்பட்ட அணுகல்களை அவர்கள் என்னிடம் நிகழ்த்தியதுண்டு. எனக்கு இவையெல்லாம் ஆர்வமிக்க விளையாட்டொன்றின் அங்கங்களாகத் தோன்றியபடியால் புதிர்மிக்க ஒருவனாய் என்னைக் கட்டமைத்த படியிருந்தேன். எனது உள்வாங்கல்களின் படி அம்மாணவர்கள் என்னை அணுகமுடிந்ததில்லை என்பதே முடிவாய் இருக்கிறது.
நான் கடந்துவந்த எல்லா ஆசிரியர்களுக்குமே எனது கதைக்கும் தொனி மீதான மோகம் இருந்து வந்திருப்பதை நான் உள்ளுணர்ந்திருக்கிறேன், இவற்றுள் ஸ, ஹ, ஷ, ஜ உச்சரிப்புகள் அளித்த பங்கு முக்கியமானது. (எல்லோராலும் தினேஸ் என்று அழைக்கப்படும் ஒருவனை நான் தினேஷ் என்பேன்)
பள்ளிக்கூடத்துக்கு சாப்பாடு கொண்டுவரும் மாணவர்கள் மிக சொற்பமானவர்களே. அவர்களிலும் மாமிச உணவு கொண்டுவர்வோர் யாரும் கிடையாது. பொரித்த முட்டை போன்ற காலை உப உணவுகள் எப்போதாவது வருவது வழக்கம். எனக்கு மூன்று கதிரைகள் தள்ளி முட்டைப்பொரியல் பார்சலை விரித்து வைத்திருந்த மாணவன் ஆசிரியை ஒருவரால் பின் வரிசையில் சென்று சாப்பிடும் படி விரட்டப்பட்டான். என்னுடன் வேறு சில விடயங்களை அலசியபடியிருந்த ஆசிரியை விடயம் மாறி, தான் சுனாமியின் பின்னர் மீன் சாப்பிடுவதை விட்டுவிட்டதாயும் இறைச்சி சாப்பிடுபவர்களைத் தனக்குப் பிடிப்பதில்லையென்றும் பிள்ளைகளுக்காக முட்டை சமைப்பதாகவும் அதுவும் பாம் முட்டையே கொடுப்பதாகவும் கூறத் தொடங்கினார். இதையெல்லாம் கூறும் போது ஒருவிதமான சங்கடம் அவருக்கிருந்தது. மீண்டும் வெள்ளைக்காரர்கள் இப்போதெல்லாம் மரக்கறிகளை அதிகம் விரும்பும் போக்கு அதிகரித்து வருவதாக கூறி மரக்கறி உணவுப்பழக்கத்தின் நன்மைகளை வகுப்பிலிருந்த பிறருக்கு கூறத் தொடங்கினார். எனக்கு இதெல்லாம் மூன்று கதிரைகள் தள்ளி இருந்த முட்டைப் பொரியலுக்கான பிராயச்சித்தமாகவே தோன்றிற்று.
நாடக வகுப்புகள் மிக சுவாரசியமானவை. 1947க்குப் பிற்பட்ட தமிழ் நாட்டு அரங்க செயற்பாடுகளை என்முன்னிலையில் கற்பிக்கும் போதெல்லாம் ஆசிரியரிடம் ஒருவித அசௌகரியம் தொற்றிக் கொள்ளும். ஆரிய பார்ப்பனீயத்துக் கெதிராக திராவிட உணர்வுகள் வெடித்துக் கிளர்ந்த வரலாறு என்ன்முன்னிலையில் கற்பிப்பதற்கு அவருக்கு பல மனத்தடைகள் இருந்தன. சிறிதாய் சிரித்தபடி ஆரம்பிப்பார் 'சர்மா.. குறைநினைக்கக் கூடாது' .
அர்சியல் கற்கும் போதுகூட ஆசிரியர்களிடம் இதை நான் உணர்ந்திருக்கிறேன். பாரதிய ஜனதாவை, ஆர்.எஸ்.எஸ்-இனை விமர்சிக்க நேரும் போதெல்லாம் அவர்கள் என்னைப் பார்த்து சமாளிப்புப் புன்னகை சிந்தத் தவறுவதில்லை. என்னை நோக்கி அவர்கள் கூறும் ச்மாதானப் பிற்குறிப்பு கீழ்க்கண்டவாறு அமைந்திருக்கும்: 'எவ்வளவுதான் பார்ப்பனீயம் கொடூரமானதாய் இருந்தாலும் அது இந்தியாவின் சமூகக்கட்டுமானங்களை முன்னேற்றியிருக்கிறது.' புரிந்து கொண்டதாய்ப் புன்னகைப்பேன். அவர்கள் தொடர்வார்கள் ' அதேபோல முற்போக்குச் சிந்தனை கொண்ட நம்பூதிரிபாடு ஒரு பிராமணர் தானே'. இந்த சமாதானங்களை எனக்கு வழங்கிவிட வேண்டும் எனத் துடிக்கும் ஓர் மனதில் ஊறிப்போயுள்ள பார்ப்பனீய அரசியலை வடிவமைத்தது எதுவாய் இருக்கக் கூடும்?

***
ஷோபா சக்தியின் 'விலங்குப்பண்ணை'
சிறுகதையிலிருந்து சில பகுதிகள்
· // ஒருமுறை பசி மயக்கத்தில் இருந்த ம.அன்ரனியை எட்டு ஸ்ரீ அடித்த அடியில் ம.அன்ரனி மயங்கி விழுந்துவிட்டான். இன்னொரு தடவை விஞ்ஞான டீச்சர் மிஸிஸ் இராசையா பிடித்து அவனை உலுக்கி “ஏனடா நித்திரை கொள்ளவா இங்கே வருகிறாய்?” என்று கேட்டபோது ம.அன்ரனி மரமாய் நின்றிருந்தான். “போய் உங்கள் சாதித்தொழிலைப் பார், உனக்கு எதற்கு சயன்ஸ்?” என்று மிஸிஸ் கந்தையா கேட்டார். வகுப்பில் இருந்த எல்லோருடைய சாதி விபரங்களையும் மிஸிஸ் கந்தையா விரல் நுனியில் வைத்திருந்தார். எப்படி இந்த சாதி விபரங்களை திரட்டினார் என்பது தெரியவில்லை. விஞ்ஞான டீச்சர்! அவருக்க தெரியாத விதிகளா? பரிசோதனை முறைகளா? ஏதாவது ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருப்பார். //

· // அதாவது A B C D எனப் பிரிக்கப்படடிருந்த எட்டாவது வகுப்பில் நான்கு பரிவுகளிலும் நாங்கள் இருவர் மட்டுமே வேதக்காரர்கள். //

· // கொடுமை, கொடுமையென்று கோயிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமை அவிழ்த்துப் போட்டு ஆடிய கதையாய் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் “வைட் அண்ட் வைட்” போட்டுக்கொண்டு வரவேண்டும் என்றொரு அவசர சட்டம் பாடசாலையில் கொண்டுவரப்பட்டது. என்னுடைய முதற் சற்பிரசாதத்துக்காகத் தைக்கப்பட்ட எனது வெள்ளைச் சட்டை எனக்கு இப்போது அளவாக இராது. அதை என் தம்பி போட்டிருக்கிறான். அவனிடம் கெஞ்சி மன்றாடி வெள்ளிக்கிழமைகளில் அச்சட்டையைப் போட்டுக்கொண்டேன். அந்த வெள்ளைச் சட்டை தொப்புள் வரைதான் வரும். அடிக்கடி கீழே இழுத்துவிட்டு சமாளிக்க வேண்டியிருந்தது. வெள்ளைக் காற்சட்டை கிடைக்கவில்லை. அதற்குப் பப்பா கொழும்பிலிருந்து வரும் வரை பொறுத்திருக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை காலைகளில் ஒரு வெறிநாயின் மூர்க்கத்துடன் அதிபர் பாடசாலையின் முன்வாசலில் நின்றிருப்பார். “வைட் அண்ட் வைட்” போட்டு வராத மாணவர்களின் குண்டிகள் அவரின் பிரம்பால் பழுத்தன. நான் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு மட்டம் போடத் தொடங்கினேன். என் வீட்டு நிலைமை தெரியாத மாணவர்கள் திங்கட்கிழமை காலையில் “பள்ளிக்குக் கள்ளம் பழஞ்சோத்துக்குக் காவல்” என்று பொருத்தமில்லாமல் என்னைப் பழிக்கத் தொடங்கினர். ஆனால் ம.அன்ரனி வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலைக்கு போனான். அவனிடமும் “வைட் அண்ட் வைட்” கிடையாது. ஆனால் அவன் அதிபரின் அடியை ஏற்றுக்கொண்டான். அவனுக்கு எதையும் நேருக்கு நேர் சந்தித்துத்தான் பழக்கம். இப்படியான சில விறுமத்தடியன்களை அடித்தும் உதைத்தும் பார்த்துத் தோல்வி கண்ட அதிபர் இறுதியில் அவர்களை “வைட் அண்ட் வைட்” போடும்வரை வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு வரக்கூடாது எனத் தீர்ப்பிட்டார். //

· // வகுப்புகள் தொடங்கிய அன்று முதலாவது பாடம் சமயம். இந்து சமய ஆசிரியர் ஜெகசோதி வகுப்புக்குள் வந்துவிட்டார். வந்தவரத்தில் பாடத்தையும் ஆரம்பித்துவிட்டார். எங்கள் வகுப்பில் மிக அழகாகப் பாடக்கூடிய பெண்ணொருத்தியிருந்தாள். அவளுக்கு நாங்கள் கே.பி.சுந்தராம்பாள் என்று பட்டம் கூட வைத்திருந்தோம். அவளை அழைத்து வாத்தியார் ஒரு தேவாரம் பாடச் சொன்னவுடன் அவள் பாட ஆரம்பித்தாள். ம.அன்ரனியின் பெயரில் இருந்து அவனும் கிறிஸ்தவன்தான் என்பது எனக்குத் தெரியும். அவனைப் பார்த்தேன். அவன் கண்களை மூடிக்கொண்டிருந்தான். முன்னைய வருடங்களின் அனுபவங்களின் போது முதல்நாள் சமய வகுப்பில் இந்து சமய வாத்தியார் “வகுப்பில் யாராவது வேதக்காரர்கள் இருக்கிறார்களா?” எனக் கேட்பார். நான் எழுந்து நிற்பேன். “போய் அசெம்பளி ஹோலில் இரு கிறிஸ்தவ சமயத்தைக் கற்பிக்க ஆசிரியர் வருவார்” என்பார். நானும் மூன்று வருடங்களாக தட்டத் தனிய அசெம்பிளி ஹோலில் காத்திருக்கிறேன். வேதக்கார வாத்தியார் வந்தபாடில்லை. இவ்வளவுக்கும் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த ஒரு வாத்தியார் எங்கள் பாடசாலையில் இருந்தார். அவர் சமூகக் கல்வியும் ஆங்கிலமும் கற்றுக் கொடுத்துவந்தார். மற்றைய நேரங்களில் புகைப்படம் பிடிப்பது தபால் தலைகள் விற்பது போன்ற உபதொழில்களையும் மேற்கொண்டு வந்தார். நான் எழுந்து ஜெகசோதி வாத்தியாரிடம் “சேர் நான் கிறிஸ்தவ சமயம்” என்று அறிவித்தேன். “வேறு யாராவது கிறிஸ்தவர்கள் வகுப்பில் இருக்கிறார்களா?” என வாத்தியார் கேட்டார். ம.அன்ரனியும் எழுந்து நின்றான். வாத்தியார் எங்கள் இருவரையும் அசெம்பிளி ஹோலுக்கு அனுப்பினார். //

· // நாங்கள் இருவரும் அசெம்பிளி ஹோலில் போய் ஒரு மூலையில் இருந்தோம். சற்று நேரத்தில் அவ்வழியால் சென்ற அதிபர் ‘ஏன் இங்கு இருக்கிறீர்கள்?” எனக் கேட்டார். “கிறிஸ்தவ சமயப் பாடம்” என்றேன். “இருங்கள் மாஸ்டர் வருவார்” என்று கூறிவிட்டுச் சென்றார். நான் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்து விலகும் வரை கிறிஸ்தவ சமய ஆசிரியர் வரவேயில்லை. //

Caste & Class

உயர் இந்து வேளாள சமூக அமைப்பு: கட்டுமானங்களும் சிதறடிப்புக்கான முன்மொழிவும்

சிவில் சமூக வடிவமைப்பு என்பதில் சமூக நிறுவனங்களுக்கு ஓர் முக்கிய பங்கு உண்டு. தமிழ் சமூக உருவாக்கத்தில், அதனுடைய தன்மைகளைத் தீர்மானிப்பதில் அதிகளவு செல்வாக்குச் செலுத்துபவை கல்வி நிறுவங்களே என்பது கண்கூடு.
யாழ்ப்பாணத்துக் கல்வி நிறுவனங்கள் பெரிதும் இந்து-சைவ-வெள்ளாளக் நியமங்களால் / கிறிஸ்தவ வெள்ளாள மெட்டுக்குடி நியமங்களால் கட்டியமைக்கப் பட்டவையே. யாழ்ப்பாணத்துப் பாடசாலைகளில் ஓரிரு அரிதான விதிவிலக்குகளைத் தவிர இந்து ஆதீனம்Xகிறிஸ்தவ மிஷனரி என இரு பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். இந்த இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று குறைவில்லாத வகையில் வெள்ளாள நலன் பேணும் மேட்டுக்குடி சமூக அமைப்பை வடிவமைப்புச் செய்கின்ற கருவிகள் தாம். மாணவர்களை இளநிலையில் சாதகமாகத் தகவமைத்துக் கொள்ளும் இச்செயற்பாடு இன்று வரை உக்கிரமாக எதிர்க்கப்படவில்லை.
மாணவர்களிடையேயான ஒழுக்கச் சீர்குலைவுகளை சீர்செய்யும் முயற்சியின் முதல்படியாக ஹார்ட்லிக்கல்லூரியின் தரம் ஆறு மாணவர்கள் தமது ஆசிரியர்களை (உபாத்தியாயர்களை என்பது மிகப்பொருத்தம்) வீழ்ந்து வணங்கும் படி கட்டாயப்படுத்தப் பட்டார்கள். இதை யாழ்.தினக்குரல் செய்தியாக வெளியிட்டது.
ஓ.எல் பரீட்சைக்காலம், மின்சாரம் சீரின்மை, எதுவந்தாலும் விடாப்பிடியாக கோவில்கள் அதிகாலை ஐந்து மணிக்கே சினிமா பாணி மெட்டிலமைந்த ஆபாசப்பாடல்களை ஒலிபரப்புவதால் உற்சாகமாக சுயபுணர்வில் ஈடுபடமுடிகிறதேயன்றி படிக்கமுடிகிறதில்லை. அதிகார அலுவலகங்களின் ஆசியுடன்தான் இது நடக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவேனும் உரிய அலுவலகங்களுடன் தொடர்புற முடிவதில்லை. அலுவலர் ஆட்சியின் சீரழிவு அனைத்து இடங்களிலும் தலைவிரித்தாடுகிறது. கோவில்களில் சென்று தட்டிக்கேட்கவும் நாதியில்லை. வெள்ளாளர்கள் வீடு பூந்து அடிப்பதற்காக சிறந்த தலித்துக்களை வைத்திருக்கிறார்கள்.
இந்த சமூகத்தகவமைப்பின் வலுமிக்க கருவியாக பாடசாலை விளங்குகிறது. சொல்லின் செல்வர்களும் செஞ்சொற்செல்வர்களும் மணிக்கணக்கில் நடாத்தும் அறுவைகளை கேட்கவேண்டியிருக்கிறது - வாய்மூடியபடி.. மூத்திரம் வரும் எங்கள் குறிகளைப் பிசைந்தபடி. ஆணாதிக்க வெள்ள்ளாளப் பிற்போக்கு அவர்கள் வாயிலிருந்து வெளிவருவதைக் கண்டும் மூக்கைப் பொத்தமுடியாதபடி நிற்பான் ஒழுக்காற்று சட்டம்பி. எழுந்து செல்லமுடியாதபடிக்கு மண்டபவாயிலில் ஆமிக்காரன் போல நிற்பான் இந்து மாமன்ற வாத்தி. சமீப காலமாக பெருகிவரும் இத்தகைய அதிருப்திகளைச் சமாளிக்கும் பொருட்டு சில இந்துக்கல்லூரிகள் சுண்டல் விநியோகிக்கின்றன. ஒன்றிரண்டு பாடசாலைகளில் தான் இந்த ஏற்பாடு மற்றையவற்றில் எல்லாம் ஒத்துழையாமைக்கான துன்புறுத்தல்களே தண்டனை.
பாதிரிகளும் மேட்டுக்குடி எலைட் அசடுகளும் நளினம் கலந்து உளறும் அபத்தங்களையும் அவர்களது வெறுப்பூட்டக்கூடிய போலியான மனிதாபிமான நல்லெண்ணத்தையும் காது வலிக்கக் கேட்டுக்கொண்டிருப்பதற்கு லஞ்சமாக கேக்துண்டங்கள், பிஸ்கட்டுகள், குளிர்பானம் தருகிறார்கள். 'பாடசாலைகளினூடு நிறுவப்படும் சாதியம்' தொடர்பான கட்டுரை சுட்டுவது போலவே மேற்கூறியது மிஷனரிப்பாடசாலைகளின் தந்திரமான நுண்ணிய செயற்திட்டங்களின் ஒரு பகுதியே.
இவ்வாறான தந்திரங்கள் மூலம் / ஒடுக்குமுறை மூலம் கல்லூரிகளில் புறநிலையாளர்களது தோன்றுகைக்கான சாத்தியங்கள் பெருமளவிற்கு இழிவளவாக்கப்பட்டுவிடுகின்றன. கெட்டிக்காரத்தனமாய் புறநிலையாளர்களது உருவாக்கம் தவிர்க்கப்பட்டு விடுகிறது.

தமிழ்த்தினப் போட்டிகளைப் போல இந்துத்துவத்துக்கு வேறு சிறந்ந எடுத்துக்காட்டு இருக்குமா என்பது தெரியவில்லை. தமிழ்த்தினப் போட்டிக்கான விவாதத் தலைப்புகளாக கடந்த 5/6 வருடங்கள் கொடுக்கப்பட்டு வரும் தலைப்புக்களின் பட்டியலை ஒருமுறை பார்வையிட்டால் போதும். இந்து மேலாதிக்கம் தெளிவாக விளங்கி விடும். விவாதத் தலைப்புகள் கிறிஸ்தவ மாணவர்களுக்கு பெரிதும் பொருத்தமற்றவை. பெரும்பாலும் சைவ/இந்து புராணீகங்கள் நிகழ்வுகள் சார்ந்துமே இவை அமைகின்றன. விவிலியத்திலிருந்தோ குர்-ஆனில் இருந்தோ போட்டிகளுக்கான தலைப்புகள் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை.
தரம் 8/9களில் அறிமுகப்படுத்தப் படும் பாலியல் கல்வி (சுகாதாரமும் உடற்கல்வியும் பாடம்) பல பள்ளிக்கூடங்களில் நடாத்தப்படுவதில்லை. இங்கு இந்துத்துவமும் மேட்டுக்குடித்தனமும் moral police ஆக தம்மைக் காட்டிக்கொள்கின்றன. சுயபுணர்வு குறித்த இழிவுணர்வு, அது சார்ந்த பிரச்சனைகள் என மாணவர்கள் உளவியல் நெருக்கடிகளுக்கு ஆளாகுவதையும் உளவளத்துணையாளர்களை நாடி அவதியுறும் போக்கும் அதிகரித்து வருவது கண்கூடு.
Save the children போன்ற INGOக்களும் சரி, DCPC போன்ற அரச ஏற்பாடுகளாக இருந்தாலும் சரி இரு அணிப் பாடசாலைகளின் காவலர்களும் 'நோ என்றி' பலகையுடன் இருக்கிறார்கள். கருத்தரங்குகளுக்கான அனுமதி கிடையாது. துண்டுப்பிரசுர விநியோகங்கள் மட்டுப்படுத்தப் பட்ட அளவில் அனுமதிக்கப் படுகின்றன. பல தவிர்க்க முடியாத காரணங்களினால் இடம்பெறும் கருத்தரங்குகளில் கஎழுந்து கேள்வி கேட்கும் மாணவன் ஒழுக்காற்று சபையின் கடூரமான விசாரணைக்கு ஆளாக வேண்டி வரும். அரங்க செயற்பாட்டாளர்கள் இக்கல்லூரி நிர்வாகிகள் பற்றிய பல சுவாரசியமான கதைகளைக் கொண்டுவருவார்கள். அதையெல்லாம் இங்கு எழுதினால் ஓரு நகைச்சுவை நாவலாக மாறிவிடக்கூடும் இக்குறிப்பு.
எமது கவனப் படுத்தல் பூரணமான ஒன்று அல்ல. நீண்ட விரிவான கள ஆய்வைக் கோரினிற்கும் ஆய்வொன்றுக்கான முன்மொழிபாகவே பாடசாலைகளினூடு சாதியம் பற்றிய தோழர்களது அனுபவப்பகிர்வுகள், கட்டுரைகள், குறிப்புகள் முரண்வெளியில் பதிவேற்றப்படுகின்றன. யாழ்ப்பாணப் பாடசாலைகள் செய்துவரும் சமூக வடிவமைப்பு மிக நுண்ணிய தளத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டிய விடயம்.
மத நீக்கம் செய்யப்பட்ட பிள்ளைநேயப் பாடசாலைகளுக்கான முனைப்புகளுக்கு எதிராக அறம், வன்முறை நீக்கத்துக்கான மதப் போதனை கட்டுப்பாடும் ஒழுக்கமும் போன்ற வேடப்பெயர்களில் மீள் வலிதாக்கம் செய்யப்படும் பிற்போக்குத் தனங்கள் வலுப்பெறத் தொடங்கியுள்ள நிலையில் திறந்த கதையாடலுக்கான முனைப்புகளைத் தூண்டுதலின் அவசியத்தை நாம் உள்ளுணர்ந்தோம்.
எரிகின்ற பிரச்சனைகளை மாத்திரம் கவனப் படுத்துகிற ஊடகங்கள் நாளைக்கு எரியப் போகும் பிரச்சனைகள் குறித்து கவனஞ் செலுத்தத் தயாராயிருப்பதில்லை. இந்த நிலையில் சாதியம் பற்றிய தனது மின்தொகுப்பை வெளியிடுகிறது முரண்வெளி.
கருத்துக்களை வரவேற்கிறோம்

மேலதிக வாசிப்புப் பிரதிகள்:
'யாழ்ப்பாணத்துச் சாதியம் ; காலனித்துவ சமரசம்'
மு.நித்தியானந்தன்
பக்.40-47, கறுப்பு (தொகுப்பு - சுகனும் ஷோபாசக்தியும்)

'விலங்குப் பண்ணை' - ஷோபாசக்தியின் சிறுகதை - சத்தியக்கடதாசி

'Schooling in Jaffna' - S.R.H.Hoole
in, 'The Exile Returned : The self-portrait of the tamil vellaahlahs of jaffna'
Aruvi publishers
Colombo

(முஸ்லிம் சுகைராக் கல்லூரிகளிலும் பிரிவேனாக்களுடன் இணைவுகொண்ட பாடசாலைகளிலும் யாழ்ப்பாண நிலவரங்களது இணைத்தன்மைகள் உண்டென நண்பர்கள் வாயிலாக அறிய முடிகிறது. முரண்வெளியின் செயற்பாட்டாளர்களில் யாரும் அத்தகைய நிறுவனங்களுடன் தொடர்புகளைப்பேண முடியாதிருப்பதால் ஆதாரங்களைத் திரட்டுதலும் குறிப்புகளைத் தயாரிப்பதும் சாத்தியமற்றதாய்த் தெரிகிறது. பொருத்தமான இடங்களிலிருந்து ஆதாரங்களுடனான கட்டுடைப்பை முரண்வெளி உங்களிடமிருந்து வேண்டிநிற்கிறது.)

முரண்வெளி - யாழ்ப்பாணக் குழுமம்

-வாசிகன்-
பாடசாலைகளினூடு நிறுவப்படும் சாதீயமும் மதமேலாதிக்கமும்;
பிந்தைய நிலவரங்கள்


1

யாழ்ப்பாணத்தின் பிரபலமிக்க ஆண்கள் பாடசாலையான யாழ் இந்துக்கல்லூரியில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் நண்பர்கள் அக் கல்லூரியின் வெள்ளாள பார்ப்பனச் சாய்வு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பலவற்றை கூறுவார்கள். நாவலர் பற்றிய சரிநிகர் விவாதங்களை ஆழமாய்க் கற்று கறுப்பு போன்ற விளிம்புநிலைக்குரல்த் தொகுப்புகள் வாசித்துக் கருத்தாடும் நண்பரொருவரும் யாழ் இந்துவில் கல்விகற்பதனால் ஏற்படும் உடலுபாதைகள் பற்றி நகைச்சுவையாகக் கூறுவார். பலவகைகளிலும் யாழ் இந்து, சென் ஜோண்ஸ் பாடசாலைத் தோழர்களின் விபரிப்புகளே எனது கட்டுரைக்கான மூல்கங்களும் தூண்டுதல்களுமாகும். பெயர்வெளியிட முடியாத நிலையிலிருக்கும் அம்மாணவர்களுக்கான நன்றியுணர்வுடன் நாம் பாடசாலை விடயங்களுக்குள் நுழையலாம்.

***

நான் இங்கு முக்கியமாக எடுத்துக்கொள்கிற களம் பாடசாலைகளே. பல்கலைகழகம் போன்ற இதர கல்விநிறுவனங்களிலும் கீழ்விபரிக்கப்படும் சாதிமேலாதிக்கத்தின் இணைத்தன்மைகள் அவதானிக்கப்பட்டுள்ள போதும் தரவு மற்றும் ஆதாரங்கள் போதாமையை மனங்கொண்டு அவை பற்றிய தகவல்கள் இங்கு தரப்படவில்லை.

***

எனக்குக் கிடைக்கும் வாய்மொழித் தகவல்களின்படி யாழ் இந்துவைவிட மற்றைய இந்துக்கல்லூரிகள் முற்போக்கானவையாகக் காட்டிக்கொள்ள முற்பட்டாலும் யாழ் இந்துவிற்கும் மற்றையவற்றுக்கும் இடையே துளியளவும் வித்தியாசம் கிடையாது என்பதுதான் உண்மை. கீழே பட்டியற்படுத்தப்படும் தகவல்கள் ஒன்றிரண்டு மாற்றங்களுடன் அனைத்து இந்துக்கல்லூரிகளுக்கும் பொருந்திப் போகக்கூடியவையே.

· பாடசாலைகளுக்கு புதுமுக மாணவர்களை உள்ளீர்க்கும் செயன்முறைகளின் போதே இந்துவேளாள வடிகட்டல் தொடங்கி விடுகிறது. தரம் ஐந்து புலமைப்பரிசிலும் நுழைவுத்தேர்வுகளும் அனுமதிக்கான முன்நிபந்தனைகள். புலமைப்பரிசிலில் பெரும்பான்மை புள்ளிகள் பெற்றுவருவது அதிகமும் டாக்குத்தர் இஞ்சினியர் லோயர் அன்ன பிறரின் பிள்ளைகளாகவே இருந்துவிடுவதால் அதிகம் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. ஆயினும் பொஸ்கோ போன்ற கத்தோலிக்க வெள்ளாள பாடசாலைகளூடு புலமைப்பரிசிலைத் தட்டிவிடும் கிறிஸ்தவர்களும் அபூர்வமாக சித்தியடைந்துவிடும் தலித்துக்களும் புலம்பெயர் உறவுகளால் புதுப்பணக்காரர்களாகிய தலித்துக்களும் தான் இந்துக்கல்லூரிகளுக்கு இருக்கும் முக்கிய சவால்கள். நேர்முகத் தேர்வின் போது மேற்குறித்தவகை மாணவர்கள் வேறுபாடசாலைகள் குறித்துச் சிந்திக்கும்படி தூண்டப்படுகிறார்கள். நன்கொடைத்தொகையைக் கூட்டிக் கேட்டல் போன்ற பொருத்தமான உத்திகள் மூலம் இது நடக்கிறது.

· 8ம் வகுப்பு வரையான மாணவர்களிடம் மாத்திரமே வாத்தியார்களதும் சட்டம்பிமார்களதும் (கவனிக்க ஆசிரியர்கள் அல்ல) செல்வாக்கு எடுபடுகிறது. 9ம் 10ம் தரங்களில் ஆயுதக்கலாச்சாரம் ஊடுருவிவிடுவதால் வாத்திகள் பெரிதும் அடக்கியே வாசிக்கும். 8ம் ஆண்டு வரையிலான மாணவர்கள் அனுபவிப்பது நரகம். மாணவர்கள் நெற்றியில் திருநீறு அணிந்து வராத பட்சத்தில் தண்டிக்கப்படுகிறார்கள். 'ஏன் அணிந்து வரவில்லை' என்ற அதட்டலுக்கும் உறுக்கலுக்கும் பின்பே நீ வேதமா என்ற கேள்வி வரும்.

· பாடங்கள் தொடங்குகையில் சில ஆசிரியர்கள் தேவாரம் பாடியே கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றனர். கிறிஸ்தவ மாணவர்களும் மதாவனம்பிக்கையுடைய மாணவர்களும் கூட எழுந்து நிற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அநேக சந்தர்ப்பங்களில் இந்தக்கட்டாயப் படுத்தலுக்கு எந்த தேவைகளும் இருப்பதில்லை; மாணவர்கள் தாமே எழுந்து நிற்கிறார்கள்.

· தண்டனை மற்றும் விசாரணைகளில் இருந்து பிராமண மாணவர்களும் பிரபலங்களின் பிள்ளைகளும் மிக இலகுவாக தப்ப முடிகிறது.

· கிறிஸ்தவ சமயம் இந்துக்கல்லூரிகளில் கற்பிக்கப்படுவது கிடையாது. மாற்று ஏற்பாடுகள் ஏதுமில்லை. சமய பாட நேரங்களில் நூலகத்துக்கோ மைதானத்துக்கோ அனுப்பிவைக்கப்படுவார்கள். ஆங்கிலமொழிவழிக் கல்வி வகுப்புகளில் முதல் மூன்று இடங்களில் ஒன்றை யாரேனுனுமொரு கிறிஸ்தவ மாணவன் பெற்றுவிடுகிற நிலையிலும் கூட இந்த அவலம் தொடர்கிறது. கிறிஸ்தவ மாணவர்கள் சைவசமயம் பாஸ்பண்ண இலகுவானது என்றவகைப் போதனைகள் மூலம் திசைதிருப்பப் ப்டுகிறார்கள். 2007 ஓகஸ்ட் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதப் போகிற அணியில் இருக்கும் மாணவர்களில் இரு கிறிஸ்தவர்கள் சாதாரண தரத்தில் சைவ சமயத்தையே எழுதினார்கள். கிறிஸ்தவம் தொடர்பாக அவர்களுக்கு ஒன்று தெரியாது. தேவாரம் நன்றாகப் பாடுவார்கள்.

· பிரார்த்தனை ஒன்றுகூடலில் பஞ்சபுராணம், பஜனை, மந்திரம், தியானம் என்று நடாத்துகிறார்கள். உடற்பயிற்சி நடாத்தப்படுவதில்லை - ஓங்கார மூச்சுப் பயிற்சியில் அவ்வளவு நம்பிக்கை. எவ்வளவுதான் தாமதமானாலும் பார்ப்பன மாணவன் இருந்தால்தான் நடராஜர் சிலைக்கு வழிபாடு நடக்கும். மேலும் அனைத்து மாணவர்களும் தலா 2/= இந்துமாமன்றத்துக்கு வழங்க வேண்டும். கிறிஸ்தவ மாணவர்களுக்கென்று தனியாகப் பிரார்த்தனை நடாத்தப் படுவதில்லை. கிறிஸ்தவ மாணவர்கள் திருநீறணிந்து சப்பாத்துக்கழட்டிப் பிறகு பிரார்த்தனை மண்டபத்தினுள் நுழையலாம். பிறர் பிரார்த்தனை மண்டபத்துக்கு வெளியே கால் கடுக்க நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. கிறிஸ்தவ மாணவர்கள் பிரார்த்தனை நேரம் முடிய பாடசாலை வரலாம் / பிரார்த்தனை நேரங்களில் வகுப்பறைகளில் அமர்ந்திருக்கலாம் போன்ற் எவ்வித நெகிழ்வுகளும் நிர்வாகத்திடம் கிடையாது. வகுப்பில் உட்கார்ந்திருந்தால் மாணவத்தலைவர்களும் ஒழுங்குபேண் வாத்திகளும் அந்தரப்பட்டு எப்படியாவது விறாந்தைகளுக்கு விரட்டிவிடுவார்கள்.

· பாடசாலைக் கீதம் இசைக்கப் படுவதற்கு முன்பாக தேவாரம் இசையுடன் பாடப்படும். கிறிஸ்தவ மாணவர்களும் எழுந்து நின்று கண்மூடி கைகூப்ப வேண்டும். சற்றே முரண்டுபிடிக்கும் இளம் மாணவர்களுக்கு சொல்லப்படும் சமாதானம் 'நீ உன்ர கடவுள நைச்சுக்கொள்'

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி உள்ளிட அனைத்துப் பாடசாலைகளிலும் வெள்ளாள மேலாதிக்கப் போக்கு சமீபகாலங்களில் கேள்விக்குள்ளாகி வருவது வெறும் மேல்மட்டத் தோற்றப்பாடே தவிர உண்மையல்ல. மேலும் இந்தக் கேள்விக்குள்ளாக்கல் எவ்வாறு அமைகிறது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும். (உதாரணங்கள் - மாணவர்களது விநோத சிகையலங்காரங்களை, ரைற்றாக ஜீன்ஸ் அணிவதை முன்புபோல் எதிர்க்க முடிவதில்லை, பெண்களை மிக மோசமாக துன்புறுத்தும் கேலிகளில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டிப்பது கூட பெரும்பாடாய் இருக்கிறது) இப்படியான கேள்விக்குட்படுத்தல்கள் நமது சமூகம் வீழ்ந்துகொண்டிருக்கும் வீழ்ச்சியின் இன்னொரு நோய்க்கூறான சாட்சி என்பதற்கும் மேலாக எதிர்காலத்தில் அறநெறி/மதம் போன்றவற்றின் மீள்வலிதாக்கத்துக்கு துணைபோகக் கூடும்.



2

கிறிஸ்தவப் பாடசாலைகள்-முக்கியமாக அங்கிலிக்கன் திருச்சபையின் சமயப் பரப்புக் கருவியும் மறுகாலனியாதிக்க சக்தியுமான சென்.ஜோன்ஸ், சுண்டுக்குளி மகளிர் போன்றவை- இதுக்கல்லூரிகளை விடவும் மிக நுண்மையான கட்டமைப்புகளைக் கொண்டியங்குபவை. மேலும் இவை வெளித்தள்ளும் மாணவ சமூகம் மேட்டுக்குடி கத்தோலிக்க வெள்ளாள சமூகத்தின் பிரதிகளாகவே பெரும்பாலும் அமைந்து விடுவர்.

இவை இந்துக்கல்லூரிகளைப் போலல்லாது சைவ சமயத்தைப் பேரளவிலாவது கற்பிக்கின்றன. சந்தனப் பொட்டு திருநீறு அணிந்து செல்லும் மாணவர்கள் முன்பெல்லாம் தண்டிக்கப் பட்டார்கள். 90களின் நடுப்பக்தியில் நிலவரங்கள் மாறி வெளிப்படையான தண்டனை நீக்கப் பட்டது. நுண்ணிய செயற்பாடுகள் மூலம் 'சந்தனப் பொட்டு மாணவன்' புறமொதுக்கலை உணரும் படி செய்யப் படுவான். யாழ்ப்பாணக் கல்லூரி பற்றிக்ஸ், திருக்குடும்பக் கன்னியர்மடம், சென்.ஜோன்ஸ், அன்னபிற பாடசாலைகளில் இதுதான் நிலமை.

நன்கொடையாளர்களைத் திருப்திப் படுத்தும் ஓர் உத்தியாகவும் இந்த semi-secular நிலைப்பாடு கடைப்பிடிக்கப் படுகிறது. இதற்குச் சிறந்த உதாரணம் பொஸ்கோ ஆரம்பப் பாடசாலை. பொஸ்கோவிற்கு முன்புறமுள்ள பிள்ளையார் கோவிலில் நவராத்திரி காலப் பிரார்த்தனைகளுக்கு சைவப் பிள்ளைகளை அழைத்துச் செல்கிறார்கள்.

சென்.ஜோன்ஸ், சுண்டுக்குளி, போன்றவை தலித்துகளுக்கான கல்விக்கூடங்கள் அல்ல. கத்தோலிக்க வெள்ளாளர்களும் மேட்டுக்குடிக்குமான பாடசாலைகள் இவை. 90களுக்குப் பின்பு யாழ். சமூக அமைப்பில் உருவாகின்ற தலித் பணக்காரர்கள் (புலம்பெயர் உறவுகள் உதவியால்) மட்டும் விதிவிலக்காக இப்பாடசாலைகளில் அனுமதியைப் பெற்றுக் கொள்ளமுடிகிறது. இவர்கள் நிர்வாகத்துக்குப் பெரும் தலையிடியாக இருப்பதில்லை. தலித் பணக்காரர்கள் மிக விரைவாகவே தம்மை நவவேளாளகுடிகளாய் வடிவமைத்துக் கொண்டுவிடுவதால் இப்பாடசாலைகளின் புனிதமிக்க நளினமிக்க இருப்பு பேணப்படுகிறது. புகுமுக வகுப்புகளில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களிடமிருந்து 75000/= வரை நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது. தவணைக்குத் தவணை அறவிடப்படும் கட்டணமும் சராசரிக்கு மிக அதிகமானது. இத்தனைக்கும் மாணவர்களுக்கு புத்தகங்கள் சீருடை பாடசாலையின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் அரசு கவனிக்கிறது. மேலதிக உட்கட்டமைப்பு வசதிகளை பெரிதும் OBA க்கள் பொறுப்பேற்கிற நிலையில் நன்கொடையாகப் பெறப்படும் நிதிகளில் பெரும்பங்கு திருச்சபையின் சமயப் பரப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கே செல்கிறது.

இந்த பாடசாலைகள் மிக உறுதியான ஆனால் இலகுவில் கண்ணுக்குப் புலப்படாத பிரச்சாரக்கட்டமைப்பு ஒன்றை சமூகத்தினுள் நிறுவி வைத்திருக்கின்றன. பாடசாலை பற்றிய உயர்வான் எண்ணத்தை சமூகமனதில் பதிய வைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் கனகச்சிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. பரப்புரைகளை நிறைப்பதற்கென்றே சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பெருந்தொகைப் பணம் அவர்களுக்காக செலவிடப்படுகிறது.
இந்த நுணுக்கமன செயன்முறை அடுக்குகள் குறித்து அறியமுடியாதளவு திறம்படச் செய்கிறார்கள். புலனாய்வுப் பத்திரிகையியல் கற்றுத் தேர்ந்தோர் கூட இந்த வலையமைப்புக்களின் துளைத்தறியமுடியா மூட்டத்தன்மையையும் சிக்கலையும் புரிந்து கொள்வதில் பல இடர்களுக்கு முகங்கொடுக்க நேரும்.


3

யாழ்ப்பாணத்து இந்துக்கல்லூரிகள் தொடர்ச்சியாகப் பண்ணிக்கொண்டிருக்கிற இந்துமயமாக்கல்/வேளாளமயமாக்கலுக்குத் தக்க சான்றாதாரங்கள் யா.இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியிட்டிருக்கும் நூற்றாண்டு விழா மலரில் நிறையவே கொட்டிக்கிடக்கின்றன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பின்வருமாறு:

· பக்.212 - அ.பி.மரியதாஸ் என்ற கிறிஸ்தவர் (வடிவமைக்கப் பட்ட இந்து?!) கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
'மேலைத்தேய ஆட்சியாளரின் வலைக்குள் சிக்கிய பிரதேசங்கள் ஆட்சியாளர்களைத் தொடர்ந்து வந்த பாதிரிமாரின் முயற்சியினால் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு ஆங்கிலக்கல்வி போதிக்கப்பட்டது. அது மட்டுமன்றி மெல்ல மெல்ல மக்கள் மத மாற்றத்துக்கு உள்ளாக்கப் பட்டனர். அரச சலுகைகள் அவர்களின் முயற்சியை இலகுவாக்கின. கீழைத்தேய மக்களின் மேலைத்தேய நாகரீக மோகம் பாதிரிமாரின் நோக்கத்தை வெற்றி பெற வைத்தன.'
'இரண்டாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட நம் பாரம்பரியப் பெருமை மெல்ல மெல்ல வீழ்ச்சியுறத் தொடங்கும் விபரீதம் கண்ட சில தமிழ்ச்சான்றோர் அந்ந்நிலை தடுக்க முயன்றோர்'
..'இக்கிளர்ச்சியின் வெளிப்பாடே தமிழ்ப்பாடசாலைகளின் தோற்றமெனலாம். இப்பாடசாலைகளின் தோற்றத்துக்கு நாவலர் பெருமானின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கதாகும்.'

*---கட்டுரையாளர்--- நாம் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சம் மரியதாஸ் கத்தோலிக்க மதகுருமாரை 'பாதிரிமார்' எனக் குறிப்பிடப் படுவதைத் தான். இந்துக்கள் தான் கத்தோலிக்க மதகுருக்களை பாதிரியென அழைப்பது வழக்கம். மற்றபடிக்கு வெறியிலிருக்கும் அதிருப்தியடைந்த மீனவர்கள் இவ்வாறு விளித்துத் திட்டுவது வழக்கம். பெரும்பாலும் 'மதகுருமார்' 'மதத்தலைவர்கள்' 'சுவாமி' 'பங்குத்தந்தை' போன்ற சொற்பிரயோகங்களே அச்சு ஊடகங்களில் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
மேலும் மரியதாஸ் ஓர் வரலாற்றுண்மையைக் கவனிக்க விரும்பவில்லை. கத்தோலிக்க மதப் பரவலும் விளிம்புகளின் மட்டுப்படுத்தப்பட்ட விடுதலையும் உடனிகழ்வுகளாயிருந்த உண்மையை அவர் லாவகமாக மறைத்து இந்து வெள்ளாளனுக்கு உவப்பான உண்மையைக் கட்டமைக்கிறார்.
'நாவலர் பிரான்' பற்றிய கட்டுடைப்பு ஆய்வுகளை மரியதாஸ் அறிந்திருக்காவிடினும் கூட நாவலர் பற்றி யாழ்ப்பாணத்தில் நிலவிவரும் சுவாரசியமான வாய்மொழிக்கதைகளைக் கூடவா அறிந்து கதைக்கமுடியாமல் போயிருக்கிறது? இதைக் கூட மரியதாஸின் தெரிவுக்கானது என நாம் விட்டுவிடலாம். மேலும் மரியதாஸ் ஓர் இந்துவைப் போல வரலாற்றுண்மைகளைத் திசைதிருப்புவதும் அவரது தெரிவுக்கானதே. நமது கேள்வி என்னவெனில் அவரது இத்தகைய தெரிவுகளை மேற்கொள்ளும் படியாக அவரது மனத்தை வடிவமைத்தது எது என்பது தான்.---

· பக்.216 - சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் இவ்வாறு எழுதுகிறார்:
'யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பெரும் அறிஞர்களையும், கல்விமான்களையும், ஆன்மீகவாதிகளையும் உருவாக்கிய பெரும் கோவில் ஆகும்'
'காத்தார் சமூகத் தொண்டன். புகழுக்காக! விளம்பரத்துக்காக! சமூகத்திற்குள் நுழைந்தவர் அல்லர்! உண்மைக் கம்யூனிஸ்ட் இவர் இந்துக் கல்லூரியை நடாத்துவாரா என..'

*---கட்டுரையாளர்---செஞ்சொற்சொல்வருக்குக் கூற எம்மிடம் ஒன்றுமில்லை. வாசகர்கள் அவரது கூற்றுக்களுடன் சேர்த்து வாசிக்க வேண்டிய ஓர் பிற்குறிப்பு இது : ஆணாதிக்க, இந்துத்துவ, உயர்குடியாதிக்க மலத்தை தன் வாயாலேயே கழித்துவரும் கம்பவாரிதிகளையும் அசட்டுத்தனமாக கோவில் கோவிலாய் ஏறி கத்திக் கொண்டிருக்கும் சொல்லின் செல்வர்களையும் உருவாக்கிய அற்புத உன்னத கோவில் இந்த இந்துக்கல்லூரி.

· பக்.223 - செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுகனார் உரைப்பது யாதெனில்:
'திரு.யோசேப் மரவேலை பொறிமுறை வரைதல் கற்பித்தவர் ஒரு கிறிஸ்தவர் என்றாலும் பிரார்த்தனைக் கூட்டத்துக்குத் தவறார். திரு சந்தியாபிள்ளை, திரு.மரியதாஸ் இவர்கள் கிறிஸ்தவ ஆசிரியர்கள். ஆனால் கல்லூரியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் எம்மை நெறிப்படுத்துவதில் முதன்மை வகிப்பர். இந்துக்கல்லூரி ஒரு பெரிய குடுமபம்.'

*---கட்டுரையாளர்---இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் இந்து மயமாக்கலுக்கான உதாரணம்.

· பக்.253 - சமீப காலமாக இலக்கியவாதியாக அறியப்பட்டுவரும் த.ஜெயசீலன் (கைகளுக்குள் சிக்காத காற்று - அரச விருதொன்றைப் பெற்றது, வார்த்தைகளை இடைனடுவில் முறித்துப் போட்டவுடன் பிரசுரிக்கத் தயாராயிருக்கும் சிறுபத்திரிக்கைகளில் இவரது கவிதைகளைக் கண்ட ஞாபகம்) எழுதிய கவிதையிலிருந்து:
'சந்தனப் பொட்டுப்பள்ளி
என்றவர் வாயடைக்க
விந்தை விஞ்ஞானம், நூறு
விளையாட்டு, கலைகள், கல்வி
என்றெந்தத் துறை என்றாலும்
"இந்துவே முதலில் இன்று"!
சந்தது சைவ மேன்மை
காக்குது.. தளராதிங்கு!'

*---கட்டுரையாளர்---ஜெயசீலன் நம்மையெல்லாம் பார்த்து அவரது கவிதையின் இறுதிப்பகுதி மூலம் ஒன்று கேட்கிறார்: 'நாம் இந்துமைந்தர் என்னும் நட்புக்கெது ஈடாகும்?' என்ன சொல்லலாம் தோழர்களே? தயவு செய்து ஒன்றும் கூறாதிருப்போம். நிச்சயமாய் நாம் அவருக்கு ஈடு கிடையாது தான்.


3

பாடசாலைகள் விடயம் சமூக அமைவாக்கத்தில் செலுத்தும் செல்வாக்கு பெரிதுபண்ணப்பட வேண்டிய விடயம் கிடையாது என்று வாதிடுபவர்களுடன் குஸ்திபோடும் எண்ணம் எனக்கில்லை. பாடசாலைகளின் சமூகவடிவமைப்புச் சக்தியை விளங்கிக் கொள்ள நான் இக்கட்டுரைக்குச் சற்றும் பொருத்தமற்ற விடுதலைப் போராட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பேரினவாத சக்திகளுக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் ஒரு பெரும் தலையிடியாகவே தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறது. எதிர்ப்பின் வலுமிக்க சக்தியாக அது இருந்து வருவதில் சந்தேகமில்லை. தமிழ்த்தேசியத்துக்கு அளப்பரிய பங்களிப்புச் செய்த கல்லூரி என்கிறார் இ.விஸ்வநாதன் (பக்.18-19, நூற்றாண்டுவிழா மலர்) நூற்றாண்டுவிழா மலரில் கல்லூரியன் வரலாற்றை எழுதுகிற பேரா.ச.சத்தியசீலன் குறிப்பிடுகிறார்:
"தமிழீழ சுதந்திரப் போராட்டம் முளைவிட்ட காலத்தில் இருந்து யாழ் இந்துவின் மாணவ மணிகள் தங்களையும் இப்போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவிலே இணைத்துக் கொண்டனர். இவ் விடுதலைப் போராட்டத்தில் முதல் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட பொன்னுத்துரை சிவகுமாரன், உலகே அதிசயிக்கத் தக்க வகையில் தன்னுயிரை தமிழினத்துக்காக அர்ப்பணித்த தியாகி திலீபன் (இராசையா பார்த்தீபன்) தளபதி இராதா எனப் பலர் இந்த வரிசையிலே திரள்வர்."

தமிழீழ விடுதலைக்கென பல மாணவர்களைத் தளபதிகளாகவும் உயர்பீடங்களிலிருப்போராகவும் உருவாக்கிக்கொடுத்த யாழ்.இந்துக்கல்லூரியின் நூற்றாண்டு விழா மலரின் பக்கநிரப்பிகளாகத் தரப்பட்டிருக்கும் 'பொன் மொழி'களில் சிலவற்றின் பட்டியல் இது. (தமிழீழத்துக்குப் பொருத்தமான குடிமக்களை வடிவமைப்பதற்கான ஒழுங்கு விதிகளாகவும் இவற்றை வாசிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.) அவர்கள் களங்களிலும் கோட்பாடுகளிலும் எட்டிய வெற்றியின் பின் யாழ்.இந்துவின் பங்களிப்பும் உள்ளது என்பது போலவே கறுப்புப் பக்கங்களுக்கும் யாழ் இந்துவும் காரணமாயிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் இதோ:

· நிலமைக்குத் தக்கபடி நடந்துகொள்
· உயரவேண்டுமானால் பணிவு வேண்டும்
· நாட்டுப்பற்றை விட அதிகமான அன்பு வேறொன்றில்லை
· இன்னுயிர் நீர்ப்பினும் நம் தமிழ் காப்போம்
· முதலில் கீழ்ப்படிதற்குக் கற்றுக்கொள், பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாகவே வந்து சேரும்
· நீ எதைச்செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், இதயம், ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்துவிடு.
· எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ, சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
· அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்
· கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள், அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்துகிறார்கள்.
· மன அமைதி வேண்டுமானால் பிறரிடம் குற்றம் காணாதே.
· சுடர்விடவேண்டுமானால் சூடுபட வேண்டும்.



***



தரவு தரு பிரதி : 1905-2005 நூற்றாண்டு மலர்
யாழ். இந்துக் கல்லூரி
பழைய மாணவர் சங்கம்.

Friday, December 15, 2006

Logo & Dedication


For Rajani Thiranagama








கதையாடலுக்கான அழைப்பு

எதுவித அரசியல் பின்னணியுமற்ற கோட்பாடுகளற்ற மிக இளம் தலைமுறையின் சிலேட்டாக முரண்வெளியைக் கொள்ள முடியும். நீங்கள் நுள்ளும் போது சரி திட்டும் போதும் சரி உரத்த குரலில் அழத் தவறாத ஓர் குழந்தையின் குரல் போல நாம் முரண்வெளியில் அலறியவாறேயிருப்போம் - நுள்ளுவதையும் கிள்ளுவதையும் பெரியவர்கள் நிறுத்தி ஓர் புன்னகை புரிவார்களேயானால் சிலவேளை நாம் சிரிக்கவும் கூடும். பல வேளைகளில் அவர்கள் தரும் இனிப்புகளில் நஞ்சுண்டா என ஆராயவும் கூடும்.
அடயாளம் காணப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள தோழர்களால் முரண்வெளி இயக்கப் படுகிறது. எமது குழுவில் யாரும் திட்டவட்டமான கோட்பாடுகளையோ அரசியல் நிலைப்பாடுகளையோ கொண்டவர்களல்ல. சாய்வுகள் நம்மிடமும் உண்டு, ஒருவகையில் அவை தவிர்க்க முடியாதவை கூட, அல்லவா?
முரண்வெளி கோப்புகள் மின் அஞ்சல் வழியாக அனுப்பிவைக்கப்படும்.
எமது பெறுநர் பட்டியலில் நீங்கள் இணைந்து கொள்ள விரும்பின் எமது தொடர்பு மின் அஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
அரசியல் தொடர்புகளற்ற யாரும் இணைந்து கொள்ளலாம். அரசியல் பின்னணிபற்றி தெளிவான எல்லைக்கோடொன்றை நாம் கடைப்பிடிக்கிறோம். எதிர்வினையாற்றுவதற்கு இது நிபந்தனையல்ல. அனைத்துத் தரப்பிடமிருந்தும் எதிர்வினைகளை நாம் எதிர்பார்க்கிறோம்.
எதிர்வினைகள், கதையாடல்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடர்புகளுக்கு

muranveli@yahoo.co.in

Thursday, December 14, 2006

Nirupa Book

எழுதப்படாத வலி மற்றும்
பகிரப்படாத கனவுகள் பற்றி……..


.....சுணைக்கிது
(சிறுகதைத் தொகுப்பு) – நிருபா

(நன்றி - வீரகேசரி உயிரெழுத்து)

தமிழ் நவீனத்துவம் மிகவும் அச்சமூட்டக்கூடியது. குரலற்றுப் போனவர்களின் எண்ணிக்கை நவீனத்துவப் பரப்பில் அதிகம்.நவீனத்துவம் தனது நுண்ணிய வன்முறை மூலம் சிதறடித்த இருப்புக்களும் அடையாளங்களும் எண்ணற்றவை.
பீதிக்கனவுத் தன்மை மிக்க இச் சூழலில் இருந்து தமிழ் இலக்கியப் பரப்பு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதை ஸ்தூலமாகவே உணர முடிகிறது.
இதுவரை அடையாளங்கள் இல்லாது இருக்கும்படி நிர்ப்பந்திக்கப் பட்டவர்களும் குரல்வளை நெரிக்கப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்து தமது அரசியல் ரீதியான இருப்பை உறுதி செய்து வருவதை நாமறிவோம்.
தலித் அரசியல் பெண்ணியம் பாஸிச எதிர்ப்பு பற்றிய கதையாடல்கள் பின் நவீனத்துவப் புலத்தில் உக்கிரமாக நிகழ்த்தப்பட்டாலும் பின் நவீனத்துவம் நாசூக்காக ஒதுக்கும் விடயங்களும் உண்டு. (விதிவிலக்கு பிரேம்-ரமேஷ்) கலகத்தன்மை மிக்க சமபாலுறவு, முறைதகாப் பாலுறவு போன்ற விடயங்கள் மிக நாசூக்காக ஒதுக்கப் படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வாறான கலகத் தன்மைகள் ஏதுமற்ற சிறுவர் உலகு குறித்த கதையாடல்கள் நிகழ்த்தப்படாதிருப்பது தந்தை வழிச் சமூகத்தின் இன்னொரு வெளிப்பாடு தானோ எனச் சந்தேகிக்க வைக்கிறது. தந்தை வழிச் சமூகம் பெண்கள் மீது செலுத்தும் வன்முறையினைப் போன்றதே சிறுவர்கள் மீது மரபின் அங்கீகரிப்புடன் பிரயோகிக்கப்படும் வன்முறை.இந்த நிலை குறித்த விமர்சனம் எழாத ஒரு சூழலை ஆரோக்கியமானதென என்னால் எழுதிச் செல்ல முடியாது.
இத்தகைய சூழலில்வைத்து நிருபாவின் பிரதியை உள்வாங்குகையில் அதன் அரசியல் முக்கியத்துவத்தை பிரக்ஞைக்குள்ளாக்கியபடி மாத்திரமே வாசிப்பை நிகழ்த்த வேண்டியிருக்கிறது.இந்த வாசிப்பு நகர்த்தல் ஒருவகையில் தவிர்க்க முடியாததும் கூட.
".......சுணைக்கிது" என்ற தலைப்பு சிறுவர்களுக்கு ஏற்படும் சூழல் சார்ந்த ஒவ்வாமையை ஞாபகமூட்டுகிறது.தொகுப்பின் உள்ளடக்கத்துக்கு மிகப் பொருத்தமான ஒரு தலைப்பு.
முதலாவது சிறுகதையை வாசிக்கத் தொடங்கியதுமே நம்மை ஆச்சரியப்படுத்தும் விடயம் அதில் கையாளப்பட்டிருக்கும் வட்டார வழக்கு. அச்சு அசலான பிசிறுகள் ஏதுமற்ற வட்டாரத்தமிழ் பதின்ம வயதுகளில் புலம்பெயர்ந்த நிருபாவுக்குச் சாத்தியமாகியிருப்பது எப்படி?
சிறுவர் மீதான வன்முறையை வலியுடன் அதன் கசப்பு மிக்க உண்மைகளுடன் ஆவணப்படுத்துகிறது முதலாவது சிறுகதை.மலையகத்தொழிலாளர் மீதான வெறுப்பும் உயர்சாதியினரின் மேலாதிக்க வாதமும் 'தோட்டக்காட்டான்' என்ற பதப்பிரயோகம் மூலம் சொல்லப்படுகிறது. தோட்டக்காடு தேவையற்றோரை தள்ளி விடும் இடமாக, அருவருப்புக்குரிய இடமாக நிருபாவின் புனைவு வெளியில் வந்து போகிறது."போட்டுவாறன்" என்கிற இரண்டாவது சிறுகதை சிறுவர்கள் மீது உளவியல் வன்முறை அறிதலற்றுப் பிரயோகிக்கப்படுவதை கவனப்படுத்துகிறது. '....சுணைக்கிது' சிறுகதை சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை அதன் மூலம் ஏற்படும் வலியை நாசூக்காகக் கூறிச் செல்கிறது.
'அடிஅடியாய்' 'முதல்நாள்' 'மழை ஏன் வந்தது" போன்ற சிறுகதைகள் சிறுவர் நல நிலை நோக்கிலான வாசிப்பிற்கும் பெண்ணியவாத வாசிப்பிற்கும் இடமளிப்பவை.சிறுவர்களது அக உலகிற்கும் யதார்த்த உலகிற்குமிடையே நிலவும் முரண்களும் மோதுகைகளும் சிறுகதைகளாகப் பரிணமித்துள்ளதை உணரமுடிகிறது.
'கடுதாசிப் பூ' சிறுகதை சிறுபிள்ளைத்தனமான முதற்காதலை(?!) அதன் அர்த்தமின்மையுடன் அதன் பரிசுத்தத்துடன் எழுதிச் செல்கிறது.முதற்காதலின் வலியை சொல்கிறது 'காதல்' என்ற சிறுகதை. தொகுப்பினுள் ஒரு கிராமமே அதன் அத்தனை இயல்புகளுடனும் இயங்கிக் கொண்டிருப்பதான உணர்வைத் தவிர்க்க முடியவில்லை.
தொகுப்பின் மிகக் கனதியான அம்சம் ஆண் உயர்சாதி மையவாதங்களைக் கொண்ட இந்துத்வக் கலாச்சாரம் அங்கீகரிக்கும் வன்முறை மற்றும் அதன் போலி மதிப்பீடுகள் போன்றவற்றுக்கும் குழந்தைகளின் உலகிற்குமிடையேயான முரண்கள் கையாளப்பட்டிருப்பதுதான்.'அடிஅடியாய்' கதையில் தாலியைக் கழட்டி எறிந்த குஞ்சியம்மா திரும்பவும் தாலி அணிந்திருப்பதைப் பார்க்கும் சிறுமி குழம்புகிறாள்.பருவமடைந்த சிறுமி ஏன் எட்டுக்கோடு விளையாடக்கூடாது எனக் கேட்கிறாள்.
பருவமடைதலின் பின் சிறுமிகளின் குழந்தமை மூர்க்கத்தனமாக இந்துத்வப் பண்பாட்டால் பறிக்கப்படுவதை 'முதல்நாள்' சிறுகதை சொல்கிறது. 'நீ தண்ணி அள்ளக் கூடாதெல்லே, துடக்கெல்லே, இனிமேல் விளையாடக்கூடாது!." என்று சொல்லியவாறேயிருக்கிறார்கள்.சிறுமி கேட்கிறாள் 'எல்லாரும் ஏன் ஒரு மாதிரிப் பாக்கினம்? ஏன் இப்பிடிப் பாக்கினம்". ஒரு பெண்ணாக ஒரு இந்து ஆணுக்கு ஏற்ற பெண்ணாக அவள் வடிவமைக்கப்படுவதை ஆவணப்படுத்தும் இச் சிறுகதை மிக முக்கியமான ஒன்று.
'மாய மனிதன்' சிறுகதை ஒரு சிறுமியால் மாத்திரமே எழுதப்படக் கூடிய ஒன்று. ஒவ்வொரு வரியும் யதார்த்தம் யதார்த்தம் என்று நகர்கிறது.விவரணைகளின் துல்லியத்தன்மை சிறுவர்கலின் உலகினுள் இலகுவாக இ;ழுத்து விடுகிறது.
வட்டார வழக்குப்பிரயோகம் மற்றும் அதன் லாவகம் தவிர்ந்து நிருபாவின் சிறுகதைகள் நம்மை ஆச்சரியப்படுத்துவது அவற்றின் விவரணைத் துல்லியத்தின் காரணமாகத்தான். தனது தாய்மண் பற்றிய நினைவுகள் நிருபாவிடம் பசுமையானதாகவே காணப்படுவதை இவை காட்டுகின்றன.
கோபம், நேசம் போடுதல் , விசுக்கோத்து கைமாறுதல் அது இது என்று குழந்தமையின் சுவடுகள் நிருபாவின் தொகுப்பில் நிறையவே உண்டு.சிறுவர்களின் மனோநிலையை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டும் - அதன் தர்க்கமின்மையை வெகு இயல்பாகச் சொல்லிச் செல்லும் வரிகள் தொகுப்பின் மிகப் பெரிய பலம்.பல்யத்தின் அறியாமை, பயம் என அனைத்து அம்சங்கலுடனும் அவை பதிவு செய்யப்படுகிண்றன.'தோட்டக்காட்டிலயிருந்து தான் உன்னை எடுத்தனாங்கள்' என்று பகடியாகப் பெற்றார் சொல்வதைக் கேட்டு தனது சொந்த்த் தாய் தகப்பனைத் தேடி தோட்டக்காட்டிற்குச் செல்லும் ஒரு பிள்ளையின் மனனிலையை பின்வருமாறு நிருபா எழுதுகிறார். "ஒரு பாய். படுக்கத் தேவை தானே. ஒரு முட்டை. எனக்கு முட்டையெண்டா விருப்பம். பொரிச்ச முட்டை.ஒரு பாதித் துவாய்.பவுடர்ப் பேணி. நான் பவுடர்ப் பேணி சேர்க்கிறனான்.சிவப்பு ரோசாப்பூ படம் போட்ட தட்டப் பேணிப் பவுடர்.நல்ல வாசம். ஒண்டுக்குள்ள தான் கொஞ்சப் பவுடர் இருக்கு.காணும்.எடுத்து வைச்சன்"
நிருபாவிடம் இருக்கும் பால்யத்தின் பசுமையான நினைவுகளுக்கு மற்றுமொரு சான்று , அர்த்தமின்மையில் நகரும் சிறுபிள்ளைத்தனமான வார்த்தை விளையாட்டுக்கள்:
'என்ன அன்னம் ? சோத்தன்னம்.
என்ன சோறு ? பழஞ் சோறு.
என்ன பழம்? வாழைப் பழம்.
என்ன வாழை ? திரி வாழை.
-------- -----------? ------------.
. ....... என்றும்
என்ன வெள்ளை? மா வெள்ளை.
என்ன மா? ஸ்ரீமா. என்றும்
கோவங் கோவங் கோவம்.கண்ணக் கட்டிக் கோவம்.செத்தாலும் பாவம்.நடுச் சாமத்தில பாம்பு வந்து கொத்தும்; என்றும்
நீளும் வரிகளால் நிரம்பியிருக்கின்றன சிறுகதைகள்.
கதைகள் நிகழும் சிறுவர்களின் உலகில் இருந்து நான் நகர்ந்து மூன்று வருடங்கள் தான் நகர்ந்திருக்கிறது.யதார்த்த உலகு குறித்த பிரக்ஞையும் அப் பிரக்ஞையுடன் என் அக உலகு எதிகொள்ளும் தீராத முரண்களும் பால்யம் பற்றிய என் நினைவுத் தளத்தை ஏறக்குறைய அழித்துவிட்டிருக்கின்றன.தொடர்ச்சியான வாசிப்புக்களின் மூலம் நான் பெற்றது நினைவுத் துண்டிப்புக்களேயன்றி வேறல்ல என்பதை நிருபாவின் பிரதியின் முன் ஒப்புக் கொள்ளவேண்டியிரு;க்கும் நிலையில்: புகலிடச் சூழலின் குரூர யதார்த்தம், கலாச்சார மொழி ரீதியான நெருக்கடிகள் சிக்கல்களுக்கிடையில் நிருபா தன் நினைவுத் தளத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஒரு சிறுகதையாசிரியராக நிருபா கொண்டிருக்கும் பலவீனங்களை கவனப் படுத்த வேண்டியுள்ளது.இத் தொகுப்பின் நோக்கும் அதன் இலக்கும் உன்னதமானவையாகவே இருந்த போதும் இதன் சூழல் சார் முக்கியத்துவம் மிகப் பெரியதாகவே உள்ள போதும் பலவீனங்களைக் குறித்து நிருபா விழிப்புடனிருப்பது மிக அவசியம்.
சிறுகதைத் தொகுப்பாக வாசிப்பதற்கும் அத்தியாயங்கள் இடம் மாறி அடுக்கப் பட்ட ஒரு நாவலாக வாசிப்பதற்கும் இடமளிக்கிறது இத் தொகுதி. Bildungsroman வகையின் உத்திகள் வீச்சுடன் கையாளப்பட்டிருந்தால் மிக முக்கியமான ஒரு நாவல் நமக்குக் கிடைத்திருக்கும்.
இத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் இருமை எதிர்வுகளாலேயே வளர்த்துச் செல்லப் படுகின்றன.நாயகப் பண்பு X எதிர் நாயக வில்லத்தனம் என்கிற எதிர்வு ஒவ்வொரு கதையினுள்ளும் தொழிற்பட்டவாறேயிருக்கிறது.நிருபா தன் நாயக நாயகிகளுக்காக உருக்கமான வாக்குமூலங்களை எழுதுகிறார், பல தருணங்களில் வாசகனிடம் கோள் மூட்டுகிறார். ஆனால் மற்றவர்கள் (அல்லது வில்லன்கள்) குறித்து நிருபா அலட்டி மெனக்கடுவதில்லை. அவர்களுக்கு இருந்திருக்கக் கூடிய நியாயங்கள் நிருபாவின் புனைவு வெளிக்குள் பதிவு செய்யப் படுவதில்லை.எதார்த்தவாத எழுத்து முறையை கதைகூறலுக்கென தெரிவு செய்துள்ள நிருபா அதன் வன்முறை குறித்து விழிப்புடனிருந்திருக்க வேண்டும்.ஷோபா சக்தியின் எதார்த்தவாத சிறுகதைகள் சில மற்றமைகளின் இருப்புக் குறித்த பிரக்ஞையுடன் எழுதப்படுவதை இங்கு நினைவு கூரலாம்.சல்மா கூட தன் எதார்த்த வாத நாவலில் பின்நவீனத்துவ ஜனநாயகப் பண்புகளை கையாண்டிருந்தார்.
ஆனால் நிருபாவின் சிறுகதைகள் கோரி நிற்கும் மாற்றங்கள் தெளிவானவை.அனைத்துமே வன்முறையை எதித்தவாறிருப்பவை.தமது மொழியில் தமது கதையைச் சொல்லியவாறிருப்பவை. பலவீனங்களோடு பார்த்தால்க் கூட நிருபாவின் "....சுணைக்கிது மிக முக்கியமான பிரதியாக தன்னை முன்நிறுத்திக் கொள்கிறது.
நிருபாவின் வலைப்பதிவு : http://puluthi.blogspot.com
Hariharasharma

ஹரிஹரஷர்மா கவிதை


கொக்கக்கோலா, மெக் டொனால்ட்ஸ் மற்றும் கொலை
*
அன்று மாலை
மரியசாமி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்
அவரது பெயர் அப்பிடித்தானிருந்திருக்க முடியும்
ஏனெனில்
அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார் ஓர் நாயைப் போல
மேலும் அவரது மரணம் பரபரப்பூட்டுவதாயில்லை
அத்துடன் அவர் கறுப்பு நிறமாயிருந்தார்
பொறுக்கப்பட்ட உலர்ந்த இலைகள் நிரம்பிய பை
அவரருகில் சிதறியிருந்தது
அழுகிய கத்தரிக்காய் கருப்பு வாழைப்பழம் இத்தியாதி நிரம்பிய
மெக் டொனால்ட்ஸ் பையை இறுகப்பற்றியிருந்தது கை
அதினின்றும் சிதறியிருந்த மலிவுரக மிட்டாய்கள்
குருதியில் தோய்ந்திருந்தன
சுடும் தார் வீதியில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது
விதவிதமான சென்ட் போத்தல்களை சேகரித்து வைத்திருந்த
கருப்புக் குழந்தை பயந்தபடியே மூக்குச்சளியைப் பினைந்தது
கோக் போத்தில் ஒன்றினுள் வெண் திரவம் இருந்தது
-கசிப்பாம்- பேசிக்கொண்டார்கள்
சட்டைப் பையினுள்ளிருந்த தாள்களில் சிங்;கள மணம்
வீசியதாம் - பேசிக்கொண்டார்கள்
* * *
அன்று மாலை
குளிர்பதனம் செய்யப்பட்ட எமது அறைகளின்
தூசு படியாத கதவுகளைத் சற்றே திறந்து
நியோன் விளக்குகள் மின்னத் தொடங்கிய
நகரத்தின் சாலையோரங்களில்
வெற்றுக் கோக் போத்தல்களை,மெக் டொனல்ட்ஸ் பைகளை
வீசி எறிந்தோம் நாம்
ஜன்னகளையும் கதவுகளையும் அடித்து மூடினோம்
இரத்தக் கறைகளை காண்பதற்கு முன்பாக
* * * *
சிவப்பு வைன்
பீட்ஸாவின் சிவப்புத் தக்காளி டொப்பிங்
சிவப்புத் தக்காளிச் சோஸ்
உண்ணமுடியாமலிருப்பதைக் கண்டு
சிரிக்கத் தொடங்கிய நீ கூட
சிவப்பு இரத்தம் பெருகியோடிய
கொலையைப் பார்த்தாய் தானே?
நண்பர்கள் அகன்ற பின்
அதே கேள்வியை மீண்டும் கேட்டேன்
விரலால் உன் இமைகளைத் தீண்டிய படி
என் விரல் ஈரமுணர்ந்ததை நீ அறிந்ததும்
கணைச் சிமிட்டி எழுந்து கொள்கிறாய்
இரு கோக் டின் களையும் ஒர் ப்ரிங்கிள்ஸ் டின்னையும்
எடுத்து வருகிறாய்
* * *
பாவனை முடிந்த பின் இவற்றை நாமாவது
வெளியில் எறியாமலிருப்போமாக
*

அமௌனன் சிறுகதை


அகதி வாழ்வில்
அருவருப்பொன்றும்
அவ்வளவாயிருந்ததில்லை
வாயுள் சலங்கழித்த
சமாதானச்சிப்பாயின் மூத்திரப்போக்கியை
கடித்தெடுக்க முடியாத
இயலாமையை விட….
--காருண்யன்

வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்…

நான் தீபன் ராஜ் மூண்டு பேரும் ஒரு செட். நாவல் பழம் புடுங்க முனியப்பர் கோவில் காட்டுக்கு போறதிலயிருந்து பள்ளிக்கூடம் போய் வாறது வரை எங்களை யாரும் தனித்தனியாப் பாக்கேலா அவ்வளவு ஒட்டு. நாங்கள் செய்யுற குறளி விஷயங்கள் கனக்க இருக்கு. கெட்டப்போலால தியாகண்ணை வீட்டு மாமரத்தில மாங்காய் அடிக்கிறது வீட்டில சொல்லாமக் கொள்ளாம நீச்சல் பழகிறது பேப்பர் ரொக்கட் செய்து ரோட்டில போற வாற ஆக்களுக்கெல்லாம் விடுறது எண்டு நிறைய. ஆனா அதெல்லாத்ததையும் விட போன வருசம் நாங்கள் தெரிஞ்சு கொண்ட விசயம் சூப்பரான ஒண்டு.
போன வருசம் நாங்கள் ஆறாம் ஆண்டில இருந்தம். நாங்கள் முதலாம் ஆண்டு படிக்கேக்கை தான் ஆமி மாமாக்கள் எங்கடை ஊரை பிடிச்சவை. தீபன் வீட்டுக்கு முன்னால இருக்கிற யோகமன்ரி வீட்டை வைபோசா எடுத்து சென்ரிப் பொயின்ற் ஒண்டும் போட்டிட்டினம். கிட்டடியில கூட யோகமன்ரி சித்திராக்காவுக்கு கலியாணம் தள்ளிப் போகுது, சீதனம் குடுக்க வீடும் காணியும் வேணுமெண்டு ஆமிப் பெரியவரிட்ட கடிதம் குடுத்தவா.
ஆமி மாமாக்கள் வந்த புதிசிலை அவையின்ர தொப்பியளையும் துவக்குகளையும் கண்டு நாயள் வெருண்டது போலவே நாங்களும் பயப்பிட்டுப் போனம் - ஆனால் - போகப் போகப் பழகிற்றுது. காலமையில ரோந்து போகேக்க எங்களைப் பாத்து சிரிப்பினம். ஆமி மாமாக்கள் கன்ரீன் ஒண்டையும் இப்ப திறந்து போட்டினம். இப்பெல்லாம் அவையக் கண்டா நாயள் மாத்திரம் குலைக்கும்.
தீபன்ட அம்மா தூரத்து ஊரொண்டில ரீச்சராயும் அப்பா வீ.சீ கிளாக்காயும் இருக்கினம். என்ர அப்பாவும் தீபன்ட அப்பாவும் வெளி நாட்டில இருக்கினம். என்ர அம்மா லைபிறறியனா இருக்கிறா.
நான் ஆறாமாண்டுக்கு வந்த புதிசில பயப்பிடாம இருக்க காட்டித்தந்தது தீபன் தான். ஆனா கொஞ்ச காலத்திலேயே அவன் என்னை விட்டு பிரிஞ்சு போற மாதிரி - அதான் படங்கள்ல வருமே அது போல- இருந்துது.
தீபன்ட அம்மா சுயிங்கம் சாப்பிட விடுறேல்லை ஆனா அவன் நிறய சுயிங்க ஸ்டிக்கர் வைச்சிருந்தான். அதயெல்லாம் காட்டி சேட் கொலர தூக்கி சண் காட்டுவான். போதாக்குறைக்கு முந்தின மாதிரி பட்டமேத்தவோ கெந்திதட்டு விளையாடவோ அவன் வாநறேல்லை. முந்திரியம்பழம் ஆயக்கூட வாறேல்லை. எனக்குச் சரியான கவலையாவும் எரிச்சலாவும் இருந்துது. இவனிட்ட கண்ணக் கட்டி கோபம் போட்டா அன்டனி, ஜீட் ஆக்களோட தான் பழக வேணும். அவங்களோட கூட்டு சேந்தா அணில் முயல் வளக்கிறது சிப்பி சோகி சேர்க்கிறது எண்டு சந்தோஷமா இருக்கலாம். ஆனா தீபன் வீட்டில போய் அண்டிக்குடுத்தானெண்டால் திரும்ப மஞ்சள் தண்ணியும் உப்பு பிரம்பும் தான். கோபமா நேசமா எண்டு விரல் நீட்டினா நேசம் எண்டு தான் சொல்லுறான். ஆனா கதைக்க வேணுமெண்ட அவற்ற கெண்டிசனுகளுக்கு ஒப்ப வெணுமாம். அவருக்கு நான் ஏழு வயசு குறச்சலாம் அவருக்கு சிங்களம் தெரியுமாம் (எக்காய் தெக்காய் துனாய் கத்தா கறண்ட எப்பா) எனக்குத் தெரியாதாம்.அதால மரியாதை தர வேணுமாம்.
எனக்கு எரிச்சல் எரிச்சலா வந்துது.ஆனா எனக்கும் சிங்களம் படிக்க விருப்பம்.அப்ப தானே இவனை மடக்கலாம்.எரிச்சலை அடக்கிக்கொண்டு எங்க தீபண்னா சிங்களம் படிச்சனீங்கள் எண்டு மரியாதயாக் கேட்டன்.நான் அண்ணை போட்டகொண்ண ஆளுக்குப் புளுகம் தலைக்கேறிப்போட்டுது. சனிக்கிழமை தன்ர வீட்ட வந்தா எல்லாம் சொல்லுறதா சொல்லீற்றுப் போயிற்றான்.
சனிக்கிழமையண்டு அவன்ட வீட்ட போனன். தீபன் எண்டு கூப்பிட உன்னின நாக்கை அடக்கி "தீபனண்ணா" எண்டு கூப்பிட்டன். "கேட் திறந்து தான் கிடக்கு திற்ந்து கொண்டு வா " எண்டு பதில் வந்துது.கேட் கிறீச் சத்தம் போட எனக்கு பயம் பயமா வந்துது. தீபன் வாசல்ல ஒரு மாதிரியா சிரிச்சுக்கொண்டு நிண்டான்.உள்ள கூட்டிக்கொண்டு போய் கொம்பாசுக்குள்ளால நூறு ரூவாய்த் தாள் எடுத்துக் காட்டினான்.பிறகு விளயாட்டுத் துவக்கு கண்டோஸ் மின்னி எண்டு கனக்க காட்டினான். நான் எல்லாத்தையும் ஆவெண்டு பாத்துக்கொண்டிருந்தன். அன்ரி கண்டாலும் எண்ட பயத்தில எல்லாத்தயும் ஒளிக்கச் சொன்னன். அவன் அப்பாவும் அம்மாவும் யாழ்ப்பாணம் போயிற்றினம் எண்டும் மத்தியானச் சாப்பாடு பாண் தான் எண்டும் சொன்னனான்.
"எங்காலயடா தீபன் உனக்கு இவ்வளவு சாமான்?" எனக்குத் தெரிஞ்சு கிட்டடியில வெளிநாட்டுச் சொந்தக்காரர் ஒருத்தரும் வரேல்லை.
முறைத்தான். 'போடா... புcensored."
'அன்ரி தீபன் தூஷணம் கொட்டுறான்" தீபன் கோள்மூட்டி எண்டு திட்டி தலயில குட்டினான். வீட்டில ஆருமில்லை எண்டது திரும்பவும் ஒருக்கா விளங்கிச்சுது.கண் எல்லாம் கலங்கி சொண்டு துடிக்கிறதப் பாத்து தீபன் சமாதானமா இறங்கி வந்து 'சரி இனிமெ இப்பிடி அண்டிப் பழகாத' எண்டான்.
கொஞ்ச நேரம் பேசாமல் இருந்த்தான்.பிறகு உள்ள போய் மயிலிறகு கொண்டு வந்து தான் சொல்லப்போறதை ஆருக்கும் சொல்லக்கூடா எண்டு சத்தியம் வாங்கினான். பிறகும் அவன் பேசாமலே இருந்தான். என்னைப் பாத்துக்கொண்டே அங்கயும் இங்கயுமா நடந்தான். பிறகு ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரிச்ச படி கிட்ட வந்து
"நீ ஐஞ்சு ரூவாய்ச் சூப்புத்தடி வாங்கிச் சாப்பிடுறனியெல்லே........'
"ஒமோம் அதுக்கென்ன"
"அதுமாதிரி.....அதுமாதிரி...ஆமி மாமாக்களின்ர குஞ்censored சூப்பி விட்டா...இவளவும் கிடைக்கும்"
எனக்குப் பெரிய புதினமாய்க் கிடந்துது. ஆனா அருக்குளிக்கிற மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு "ச்சீ! மூத்திரம்" எண்டு சொன்னன்.
"இல்லையடா மடையா!.. சின்னப்பிள்ளை மாரிக் கதைக்கிறாய். ஆமி மாமாக்களின்ர மணி எங்கட மாதிரியில்லை. அது பெரிசு ..இதரைப் பழமளவு இருக்கும் . அதைச் சுத்தி மயிரெல்லாம் இருக்கும் மூத்திரமெல்லாம் வராது."
எனக்கு அந்த வித்தியாசத்தப் பாக்க வேணும் போல கிடந்துது. அதெப்பிடி.. இவன் புருடா விடுற ஆள்த் தானே. அதில மாத்திரம் ஆள் விண்ணன்.
'பொய் சொல்லாதடா..'எண்டு கத்தினன்.
'டா' போட்டத இப்ப அவன் பெரிசு படுத்திற மாரித் தெரியேல்லை.
'நீ வேணுமெண்டா ஜான் அண்ணையக் கேட்டுப்பார். அவரும் சென்ரிக்குப் போறவர். அவர் சொல்றார் அதுக்குப் பேர் குஞ்சாமணி இல்லயாம் உண்மையான பேர் சுண்censored"
'அரியண்டமாயிருக்காதோ?" நான் மெல்லிய குரல்ல கேட்டன்.
'முதல்ல அப்பிடித் தான்.. சூப்பச் சொல்லி பண்டா மாமா வெருட்டினவர்.துவக்கால சுடுவம் எண்டு கூட ஒரு மாமா சொன்னவர்.ஆனா பிறகு அப்பிடியில்லை. எனக்கும் உம்மை மாதிரி ஒரு மல்லி இருக்கு எண்டு சொல்லி கொஞ்சுவார் - அப்பா மீசை குத்தக் குத்தக் கொஞ்சுவாரே அப்பிடி நல்லா இருக்கும். சரியாக் கூசும். சிங்களம் சொல்லித் தருவார். என்னட்டத் தான் அவர் தமிழ் படிக்கிறவர். கன்ரீன் ரொபியள் எல்லாம் எனக்குத் தான்.'
தீபன் சொல்லச் சொல்ல எங்கும் சரியான விருப்பம் வந்துது. எவ்வளவு நல்லாயிருக்கும் சுயிங்கம் ஸ்டிக்கர் ரொபி நூறு ரூவாய்த்தாள்...........ஒருக்காப் போய்ப் பாப்பம்.
பதினொரு மணியப்பிடி தீபன் ரோட்டடிக்குப் போய் தெரிஞ்ச முகங்கள் நடமாடுதோ எண்டு ரெக்கி பாத்தான். ஒருத்தரும் இல்லாத ஊட்டில சடாஸெண்டு பொயின்ற்றுக்குள்ள போட்டான் - என்னையும் இழுத்துக்கொண்டு. நான் முழி முழியெண்டு முழிச்சுக்கொண்டு நிண்டன். ஆமிக்கார மாமா என்னை ஆரெண்டு தீபனிட்ட கேட்டிச்சினம். 'தீபன் மை பிரெண்ட்' எண்டு இங்கிலிசு பேசினான். ஆமி மாமா என்ர கொட்டயப் பிடிச்சு நசிச்சு 'ஆ! குண்டு பொம்." எண்டார். தீபனும் மற்ற மாமாவும் விழுந்து விழுந்து சிரிச்சினம். தீபன் அவரை பண்டா அங்கிள் எண்டு கூப்பிடச் சொன்னான். பண்டா மாமா அதில நிண்ட இன்னொரு மாமாட்ட என்னமோ சொல்லிட்டு எங்கள் இரண்டு பேரையும் பங்கருக்க கூட்டிப்போனார். தீபன் சொன்னது மாதிரியே அவற்ற குcensored வாழைப்பழம் மாதிரிப் பெரிசு தான். ஆனா அவற்ர நிறம் சிவப்பு ஏன் மணி மட்டும் கறுப்பு எண்டது தான் எனக்குப் பெரிய சந்தேகம். அதின்ர மணம் எனக்குப் பிடிக்கவே இல்லை. மாமா கொஞ்சினது தடவினது எல்லாம் நல்லா இருந்துது. ஆனா கடைசியா மணியிலேர்ந்து வந்தது தான் என்னகுப் பிடிக்கேல்லை.உண்மையாவே அரியண்டமா இருந்துது. துப்பிப் போட்டன். பண்டா மாமா கன்னத்தில தட்டிச் சிரிச்சுப் போட்டு ஒதுக்கப் போய் சூச்சா விட்டார். எனக்கு ஒங்காளம் ஒங்காளமா வந்துது. தீபனப் பாத்து நெருமினன். 'என்னடா இது மூக்குச் சளி மாதிரி.....ச்சீ..!' அவன் தனக்கும் முதல்ல இது போலத்தான் இருந்தது எண்டு சமாதானம் சொன்னான். எனக்கு அழுகை அழுகையா வந்துது. ஆனா ஆமி மாமா ஐஸ்கிறீமுக்கு காசு தந்தகொண்ண கோபமெல்லாம் காணாமப் போட்டுது.
இதுக்குப் பிறகு கிழமையில இரண்டு மூண்டு தரம் நான் சென்ற்றிக்குப் போகத் தொடங்கீட்டன். ஒரு நாள் பண்டா மாமா சிங்களத்தில என்ர பேரை எழுதித்தந்தார். வகுப்பில அத்தனை பேருக்கும் காட்டி சேட் கொலரைத் தூக்கி விட்டன். தீபனை விட நான் நல்ல பாஸ்ராவே சிங்களம் படிச்சிட்டன். பண்டா மாமா சில நேரம்தான் சூப்பச் சொல்லுவார். பிறகு சின்னப்பிள்ளயள் தமிழ்கதைக்கிற ஸ்ரைல்ல கதை சொல்லுவார். மடியில ஏத்திவச்சு முள்ளுத் தாடியால உரஞ்சி உரஞ்சி சிரிப்பார். பிறகு பேசாமல் இருப்பார். ஒருக்கா கட்டிப் பிடிச்சு அழுதவர். அவர் சொல்லித்தந்த பாட்டுப் போல எங்கட மிஸ்ஸும் ஒரு பாட்டுச் சொல்லித்தந்தவா - குருவிக் குஞ்சே குருவிக் குஞ்சே எங்கே போகிறாய்.... நான் சிங்களப் பாட்டை தமிழில கொப்பின்ர பின்பக்கம் எழுதி வச்சிருந்தன்,

குருளுப் பஞ்சோ குருளுப் பஞ்சோ
கோய்பத யன்னே..
கொட்டல கொட்டல தான்ய கபலி
கன்னட்ட யன்னே.


புஞ்சிலன் பட்டியோ புஞ்சிலன் பட்டியோ
கொய்பத யன்னே
கொந்தட்ட இதுனு அம்பக்கொட்டியக்
கன்னட்டயன்னே


எலுபட்டியோ எலுபட்டியோ
கோய் பதயன்னே
நுக கொல கலாத்துறுன்
கன்னட்ட யன்னே


புஞ்சி பபோ புஞ்சி பபோ
கொய்பத யன்னே
ஸ்கோலட்டக் கொஸ்பாட கிய
கரனட்ட யன்னெ

*
நானும் தீபனும் இதயெல்லாம் ராஜிட்ட சொல்ல அவன் கள்ளச் சிரிப்புச் சிரிச்சுக் கொண்டே கிணத்தடிக்கு குளிக்க வாற ஆமி மாமாக்கள் பற்றிச் சொன்னான். அசுகிடாக் கள்ளன்.
நிறய விளையாட்டுச் சமான்கள் ரொபியள் கண்டோசுகள். எங்களுக்குச் சரியான சந்தோஷம்.
ஆமி மாமாக்கள் ஜான் அண்ணாவுக்கு நிறய வீடியோ கொப்பியள் குடுத்திச்சினம். ஜானண்ணா அதயெல்லாம் எங்களுக்கும் போட்டுக் காட்டினான். ஆம்பிளயளும் பெம்பிளயளும் உரிஞ்சாங் குண்டியோட வருவினம். அவை செய்யுற ஒவ்வொண்டுக்கும் ஜானண்ணா பேர் சொல்லித் தந்தான். அவனோட ஓ.எல் படிக்கிற அண்ணை மாரும் வந்திருந்து படம் பாக்கிறவை. அந்தப் படங்கள்ல வாற மாதிரி ஜானண்ணா ஒருநாள் ஆட்டிக் காட்டினான். எங்களுக்கு அது ஏலாமப் போட்டுது. நாங்கள் சாமத்தியப் படேல்லை எண்டு எல்லாருஞ் சேந்து நக்கலடிச்சாங்கள்.
எங்களுக்கு கோபம் கோபமா வந்துது. ஆமிக்கார மாமாட்டப் போய் அவனச் சுடச் சொன்னம். ஆமி மாமா சிரிச்சிட்டு எல்லருக்கும் சுயிங்கம் தந்தார். அவர்லயும் எங்களுக்கு கோபம்.
இந்தக் கோபம் பண்டா மாமா வெளிசக் கூடுகளைத் தந்த கொண்ண எந்தப் பக்கமா போச்சுது எண்டே தெரியேல்லை. வெள்ளை நிறத்தில நல்ல வடிவான வெளிச்சக்கூடுகள்.
சரி அதை விடுங்கோ. விஷயத்துக்கு வருவம் உங்களுக்கு வெள்ளைக்கலரில வடிவான வெளிச்சக் கூடுகள் வேணுமெண்டா அடுத்த சனி தீபன் வீட்ட வாங்கோ.........
நாங்கள் உங்களை ஒரு இருண்ட பங்கருக்கை கூட்டிப் போவம்.
அதுக்குப் பிறகு வடிவான வெள்ளை நிற வெளிச்சக்கூடுகள் உங்களுக்குக் கிடைக்கலாம்,

*********************************


-அதீதன்-
வெளித் தோன்றும் மறுபாதியின் கதை


நிறப்பிரிகை, கிரணம் போன்ற இதழ்கள் சமப்பாலுறவின் மீதான வழிமொழிதல்களை முன்வைத்ததன் பின் தமிழ்ச் சூழலின் எதிர்வினை எதுவாக இருக்கும் என அறிய நேரும் வாசகன் அச்சூழலின் சனாதனம் குறித்து அதிர்ச்சியடைய நேர்கிறது. கோட்பாடாக மாத்திரம் அற்முகமாகியதால் சமப்பாலுறவு வெளி குறித்த புரிதல்கள் தட்டையாக நிகழ்ந்திருக்கலாம் என்னும் புரிதலின் அடிப்படையில் தமிழக இலக்கிய-தத்துவப் புலத்தின் எதிர்வினையை உள்வாங்க முடிகிறது.
ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை ஷ்யாம் செல்வதுரையின் புனைவுகள் சமபாலுறவு வெளி மீது தேவையான கவனிப்பைச் செலுத்தியுள்ளன. சமப்பாலுறவாளர்கள் மீதான ஒடுக்குமுறை, அவ்வுறவு வெளியின் அரசியல் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்த முனைந்த அவரது பிரதிகளுக்கு நமது எதிர்வினை எதுவாக இருந்தது?
83 இனக்கலவரத்தின் பின்னணியில் நிகழும் கதையினைக் கொண்ட ‘Funny Boy’ வெளிவந்து எத்தனை வருடங்கள்? ஷ்யாம் செல்வதுரை ஒரு தமிழர். ‘Funny Boy’இன் முக்கிய பாத்திரமான அர்ஜி செல்வரட்னம் ஒரு தமிழன். நாவலில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளும் அட்டூழியங்களும் சிறப்பாகச் சித்தரிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாவல் சர்வதேச ரீதியிலான கவனத்தையும் பெற்ற ஒன்று. நம் புகழ் பெற்ற வெளி ஒதுக்கல் கொள்கையின்படி இந்த நாவல் நிராகரிக்கப்பட எவ்வித நியாயங்களும் இல்லையே. ஏ.ஜே.கேயினால் எழுதப்பட்டு மு.பொவினால் மொழிபெயர்க்கப்பட்டு சரிநிகரில் பிரசுரமாயிருந்த சிறிய குறிப்பொன்றையும் யுகம் மாறும் தொகுப்பில் வெளிவந்த செல்வா கனகநாயகத்தின் ஆங்கிலக் கட்டுரையினையும் தவிர வேறெதையும் நான் கண்டதில்லை. எனவே, நாவல் கொண்டிருந்த சமப்பாலுறவுக் கையாள்கையே நமது ஒவ்வாமைக்குக் காரணம் என ஊகிக்க முடிகிறது.
மௌனம். மௌனம் மேலும் மௌனம். மௌனம் என்பது சாவுக்குச் சமம் என்கிறார் ஷோபா சக்தி. கொஞ்சமாவது உயிரைக் கையில் வைத்திருப்போரிடம் இருந்து காத்திரமான விவாதங்களை கோரி எழுதப்படுகிறது இக்கட்டுரை.

1
தெற்காசிய நவீனத்துவம் குரூரமான மரபுத்துண்டிப்பை நிகழ்த்திக்கொண்ட ஒன்றாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முனைந்தாலும், இந்திய/இந்துத்வப் பெருமரபிலிருந்தும் காலனித்துவம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட விக்டோரியச் சனாதன மதிப்பீடுகள் என்பவற்றிலிருந்து விடுபட்ட ஒன்றல்ல அது. சமப்பாலுறவு போன்ற கலகத்தன்மை மிக்க சமூகக்கூறுகளை தனது உடைக்கவியலா மௌனத்தின் மூலம் இருட்டடித்த பெருமை அதற்குரியது. சிறுமரபுகளை மீட்புருவாக்கம் செய்தலும், சொல்லப்பட்ட வரலாற்றின் மீதான கட்டுடைப்பும் மாயா-எதார்த்தவாதத்தின் வருகையினையொட்டி நிகழ்ந்தனவேயாயினும் தெற்காசியக் கலாச்சார மனம் தனக்கு உவப்பான சிறுமரபுகளை மாத்திரம் தேர்ந்தெடுத்துப் புனைந்து கொண்டது. ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை, போன்ற பெருங்கதையாடல்களில் புதைந்துள்ள சமப்பாலுறவுக் கூறுகளையோ, சமப்பாலுறவுக்கென ஓர் அத்தியாயத்தையே ஒதுக்கிய வாத்ஸ்யாயனரையே யாரும் கண்டுகொள்வதில்லை.
மத்திய காலத் தெற்காசியாவில் எழுதப்பட்ட பாபர் சக்கரவர்த்தியின் சுயசரிதையான Tuzuki – I – bari பதின்ம வயதுச் சிறுவனின் மீது சக்கரவர்த்தி கொண்டிருந்த மனோரதியக்காதலைச் சித்தரிக்கிறது. இதெல்லாம் மறைக்கப்பட்ட வரலாறு.
இங்கிலாந்தின் புகழ் பெற்ற ஒஸ்கார் வைல்ட் பிரச்சனை தீர்த்துவைக்கப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே-1942இல்-உருது நாவலாசிரியையான இஸ்மத் சுகாட்டாயின் Lihaf ( The Quilt ) நாவல் வெளியாகிறது. எஜமானிக்கும் வேலைக்காரிக்கும் இடையிலான பெண்சமப்பாலுறவு நாவலில் கையாளப்பட்டிருந்ததால் சுகாட்டாய் மீது வழக்குத் தொடரப்பட்டது. முப்பதுகளில் நடந்து முடிந்திருந்த Lady Chatterley's Lover - D.H.Lawrence, Ulysess - James Joyce வழக்குகளின் தீர்ப்புகள் நிகழ்த்திய தாக்கமோ என்னவோ நீதிமன்றம் மிக முற்போக்கான தீர்ப்பை வழங்கி சுகாட்டாயை விடுவித்தது.
நீண்ட கால மௌனத்தைக் கிழித்துக் கொண்டு வெளிவந்த கமலாதாஸின் My Story பதின்மப் பருவப் பெண்சமப்பாலுறவைக் காட்டியது. இளம் ஆசிரியை மீது தனக்கு ஏற்பட்ட சபலத்தையும் கமலாதாஸ் அதில் பதிவு செய்திருந்தார்.
வெகுசனப் பண்பாட்டுத் தளத்தில் சமப்பாலுறவு பற்றிய கதையாடல்கள் ஆரோக்கியமாய் இருந்து ஞாபகமில்லை (இந்தியா டுடே ஓரளவு விதிவிலக்கு). மிக மலிவு ரக நாவலான Strange Obsession (Shopa De 1993), அதன் பெண்சமப்பாலுறவுச் சித்தரிப்புகளால் பெற்ற சந்தை வரவேற்பும் இதைத் தொடர்ந்து வெகுசன ஊடகங்களில் நடந்த உற்சாகமான சர்ச்சைகளும் தனித்த சமூகவியல் ஆய்வுக்குரியவை.
80களின் நடுப்பகுதியிலிருந்தே காத்திரமான விவாதங்கள் எழுகின்றன. பெரிதும் புலம்பெயர் இலக்கியவாதிகளிடமிருந்தே இவை எழுந்தன. அவர்களது புலம்பெயர் வாழ் சூழலும் அதன் சுதந்திரத்தன்மையும் இதற்கான காரணங்களாயமையலாம்.
(சமப்பாலுறவு பற்றிய கதையாடல் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப் படுவதையும் அது எதிர்கொள்ளும் சிக்கல்களையும் மனங்கொள்ள முடிந்தாலும் சமூகப் பொருத்தப்பாடு கருதி தெற்காசிய எழுத்தாளர்களது பிரச்சனைகளே இங்கு ஆராயப்படுகிறது)
மிகக்குறைந்தளவிலான எழுத்தாளர்களே சமப்பாலுறவாளர்களின் சுயத்துக்கும் அடையாளத்துக்கும் இடையிலான மோதுகை, சுயத்தைக் கட்டமைத்த இனத்துவ, காலனிய, பின்காலனியக் கதையாடல்கள், இந்தியப் பெருங்கதையாடலில் சிக்குண்ட உடல் என எழுத முன்வருகிறார்கள். ப்ராவுல்லா மோஹந்தி(Prafulla Mohanti), அகா ஷாகிட் அலி(Aga Shahid Ali), அன்ட்ரியூ ஹார்வீ(Andrew Harvey), சுனிட்டி நம்ஜோஷி(Suniti Namjoshi), விக்ரம் சேத்(Vikram Seth), ஷ்யாம் செல்வதுரை போன்றோரை இவ்வாறு அடையாளப்படுத்த முடியும்.
இலங்கையில் பெரிதும் அறியப்பட்ட விக்ரம் சேத் தனது புனைவுகளில் பாலியல் ரீதியான சுயத்துடன் முரண்பட முடியாது என்பதை ஆழமாக வலியுறுத்தும் ஒருவர்.சுய அடையாள ஏற்பினையும் குற்றவுணர்வு நீக்கத்தையும் பேசுவன விக்ரம் சேத் பிரதிகள்.
நாக்பூரில் பிறந்து பழைய டெல்லியில் வளர்ந்து பதின்ம வயதுகளில் புலம்பெயர்ந்த அன்ட்ரியூ ஹார்வியின் One Last Mirror, Burning House போன்ற நாவல்கள் மிக வெளிப்படையான மொழியிலமைந்தவை. ப்ராவுல்லா மோஹந்தியின் தற்புனைவான ‘Through Brown Eyes’ இனவாத வன்முறை பெருகும் ஐரோப்பியச் சூழலில் சமப்பாலுறவினை ஆராய்கிறது.
சுனிட்டி நம்ஜோஷியின் Feminist Fables தொன்மப்பிரதிகளையும் தேவதைக் கதைகளையும் பெண்ணிய-சமப்பாலுறவு நோக்கில் மறுவாசிப்புச் செய்கிறது. இவரது புனைவுகளும் (எ.கா - Conversation of a cow) சமப்பாலுறவினை எழுதி வெளித்தெரிய வைக்கும் முயற்சிகளே.
தீவிர பெண்ணியலாளரும் பெண்ணிய அரசியலாக்கம் குறித்து தொடர்ந்து பேசி வருபவருமான சுனிட்டி நம்ஜோஷியும் ஷ்யாம் செல்வதுரையும் மாத்திரமே தமது சம்ப்பாலுறவு அடையாளம் குறித்து வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்கள். மற்றையோர் தீவிர கவனத்துடன் த்மது அடையாளத்தினை மறைத்துக் கொள்வதை எவ்வாறு எடுத்துக் கொள்வது?
இந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் பெரும் பாழ்வெளியை எழுதிக்கடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. Christopher Isherwood, Truman Capote, Gore Vidal போன்றோருடன் தொடங்கி Allan Hollinghurst, David Sedaris என நகரும் அமெரிக்க ஐரோப்பிய சமப்பாலுறவு எழுத்தே பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறது. எ.கா – ஆலன் ஹோலிங்ஹர்ஸ்ட்டின் On the line of beauty புக்கர் பெற்ற போது எழுந்த சர்ச்சை. சமப்பாலுறவை வாழ்விலும் கலையிலும் கொண்டுவந்த பாஸ்பின்டெரின் ஜேர்மனில் கூட Homophobia அகன்றபாடில்லை. ஆளானப்பட்ட அமெரிக்காவின் ஒஸ்கார் கூட அங் லீயின் Broke back Mountainஇற்கும் ஸ்டீபன் டால்டிரையின் The Hours இற்கும் என்ன செய்தது? ( இவ்விடத்தில் Broke back Mountainஇனை Bareback Mounting என conservatives சினிக்கலாக எழுதியது ஞாபகம் வருகிறது.

2
சமப்பாலுறவு வெளி பற்றிய கதையாடல்கள் 90களின் பின் தமிழில் அரும்புகின்றன. இது குறிது எழுதியோராக – நானறிந்தவரை – ஜெயமோகன், சாரு நிவேதிதா, பிரேம்-ரமேஷ், மாலதி மைத்ரி, லஷ்மி மணிவண்ணன், ஷோபா சக்தி, திசேரா ஆகியோரைக் குறிப்பிட முடியும்.
ஜெயமோகனதும் (விஷ்னுபுரம் நாவலின் குறித்த சில பகுதிகள்) சாரு நிவேதிதாவினதும் பிரதிகள் சமப்பாலுறவு மீதான குற்றவுணர்வையும் அருவருப்பையும் ஏற்படுத்தியபடி – ஆனால் கலகம் செய்யும் பாவனையில் எழுதப்பட்ட பிரதிகள் அவை.
லஷ்மி மணிவண்ணனது கவிதைகள் சிலவற்றில் சமப்பாலுறவு குறித்த விவரணைகளைக் காண முடியும் (சங்கரின் தொடுதலில்/எழுந்து நெளிகிறது/ சங்கருக்குக் கதவற்ற / எனது வீடு). பிரேம்-ரமேஷ், யவனிகா ஸ்ரீராம் ஆகியோரது கவிதைகள் குற்றவுணர்வேதுமற்று சமப்பாலுறவை ஆராதிப்பவை. இணையின் பால் சுட்டப்படாது எழுதப்பட்ட கவிதைகளை சமப்பாலுறவு நிலை நோக்கிலான வாசிப்பில் கொண்டாட்டங்களென எதிர்கொள்ள முடியும். மாலதி மைத்ரி தனது கட்டுரையில் (செம்புலப்பெயல் நீர்) சமப்பாலுறவுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்கிறார்.
ஷோபா சக்தியின் சிறுகதைகள் சிலவற்றில் சமப்பாலுறவு சித்தரிக்கப் படுகிறது. தேசத்துரோகி தொகுப்பில் உள்ள ‘காய்தல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. (அவரது கதை சொல் முறையின் பெருந் தோல்வி அக்கதையே என்பது வருந்தத் தக்கது.)
திசேராவினுடைய சிறுகதை (‘கண்ணியத்தின் காவலர்கள் – வெள்ளைத் தோல் வீரர்கள் தொகுப்பில் உள்ளது) சமப்பாலுறவாளர்களை அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தும் இந்துத்துவ மரபு தன்னை moral police ஆக வடிவமைத்துக் கொள்வதை parody செய்கிறது. ஆனால் வெறும் மோஸ்தர் விவகாரமாகவும் அரசியல் ஆழநுணுக்கமற்ற எதிர்ப்பிலக்கியப் போலியாகவும் அக்கதை எஞ்சி விடுகிறது.
தமிழில் சமப்பாலுறவு வெளி குறித்து இதுவரை எழுதப் பட்டவற்றில் சிறந்த பிரதிகளென பிரேம்-ரமேஷினுடைய பிரதிகளைக் குறிப்பிட முடியும். : பெண்சமப்பாலுறவு பற்றிய பிரேம்-ரமேஷின் கதையான ‘அங்கும் இங்கும் உடல்கள், இங்கும் அங்கும் கதைகள், கலாச்சாரத்தின் வழி சமைந்த மூன்றாமுலகப் பெண் மனமும் உடல்ச்சலனங்களும் தீராது தமக்குள்ளேயே நிகழ்த்தியவாறிருக்கும் மோதுகைகளைப் பரிசீலிக்கிறது.
ஆண்சமப்பாலுறவு வெளியினுள் நிகழும் ஆண்டான்-அடிமைத் தர்க்கம் , சமப்பாலுறவாளர்களின் மனச்சிக்கல்கள்களை ஆராய்ந்து முன்வைக்கும் ‘மனவெளி நாடகம் சிறுகதை கவித்துவமான புனைவு முயற்சி.
உள்ளிணைப்பு:
ஷ்யாம் செல்வதுரையின் புனைவுகள்
ராஜீவ விஜேஸின்கவின் 'Days of Despair' உம் சரி ரொமேஷ் குணசேகரவின் 'Reef'உம் சரி சமப்பாலுறவைச் சித்தரித்தாலும் அவற்றின் கதைகள் சமப்பாலுறவை மையங்கொண்டமையவில்லை. ஆங்கிலத்தில் எழுதும் இலங்கை எழுத்தாளர்களில் ஷ்யாம் செல்வதுரையே சமப்பாலுறவை மையப்படுத்திய நாவலை எழுதியவர். Funny Boy இல் கதை சொல்லி கதை சொல்லி தனது 'வித்தியாசத்தை' உணர்ந்த படி வளர நேர்கிறது.
Lambda, W.H.Smith First Novel Award போன்ற பல சர்வதேச விருதுகளை வென்ற ஷ்யாம் செல்வதுரை தனது Funny Boy நாவலை சுயசரிதைத் தனம் மிக்கதென ஏற்றுக் கொள்கிறார். அந்தளவிலேயே மனத்தடைகள் ஏதுமற்ற ஒருவராக அவர் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்.
சிங்கள-தமிழ் கலப்புத் தம்பதிகளின் புதல்வனான ஷ்யாம செல்வதுரை தற்போது கனடாவில் அவரது துணைவருடன் வசித்து வருகிறார். சுவாரசியமான கதைசொல்லியான இவரது மூன்று நாவல்கள் இதுவரை வெளியாகியுள்ளன (Funny Boy, Cinnamon Gardens, Swimming in the monsoon sea).
குற்ற உணர்வற்ற பாவ ஒப்புதல்த் தொனியில் எழுதப்பட்ட கதையைக் கொண்டது Funny Boy. அர்ஜி செல்வரத்னத்தின் பதின்ம வயதுகளைச் சொல்கிறது நாவல்: அர்ஜி பெண் தன்மை மிக்கவனாகவும் பெண்போன்மை நிலைக்கான உந்துதல் உடையவனாகவும் (effeminate tendencies) இருப்பதால் ‘Funny’ என்ற அடைமொழி கொண்டழைக்கப் படுகிறான். தோழமையற்ற வளர்சூழலும் அதிகரிக்கும் இனவன்முறைப் பின்னணியும் சேர்ந்த கதைக்களனில் அர்ஜியின் பாடுகள் எழுதப்படுகின்றன.
ஆறு தனித் தனியான கதைகளாகவும் ஒன்றுசேர்த்து வாசிக்கையில் திருப்திகரமான நாவலாகவும் இருக்கும் வண்ணம் கட்டமைக்கப் பட்ட பிரதி ஓர் வெற்றிகரமான Bildungsroman ஆகத் தன்னை நிறுவிக் கொள்கிறது.
அர்ஜியின் பொழுதுகள்: கொடுங்கனவினுள் மலர்தல்
அர்ஜியின் உறவினர்கள் ஒன்றுகூடும் ஞாயிற்றுக்கிழமையொன்றின் சம்பவங்களுடன் தொடங்குகிறது நாவல். அர்ஜியின் மாமா, மாமிகள் அவர்களின் பிள்ளைகள் என அனைவரும் ஒன்றுகூடும் அந்த ஞாயிற்றுக்கிழமைகள் அர்ஜியின் முரண்பாடுகளை வெளித்தெரிய வைக்கும் களங்களாக அமைந்து விடுகின்றன.
சிறுமிகள் கொல்லைப் புறத்தில் தனியாகவும், சிறுவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வேறோரிடத்திலும் விளையாடுவது வழக்கமாயிருக்கிறது. அர்ஜி தான் பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட விரும்பியதாகக் கூறுகிறான். அர்ஜி இயல்பாகவே கற்பனைத் திறன் மிக்க அழ்கியல் உணர்வுகளுடைய ஒருவன். ஆண் சிறுவர்களுடைய விளையாட்டுக்கள் மீற முடியாத விதிகளால் அமைந்து வறண்டு போயிருப்பதால், கற்பனச் சுதந்திரத்தைக் கொண்டாடும் தேவதைகதைகளது ‘போலச் செய்தல்கள் அவனை ஈர்க்கின்றன. அர்ஜியினது கற்பனைத் திறன் அப் போலச் செய்தல்களில் புதிய திருப்பங்களைக் கொண்டுவர சுவாரசியமான முடிச்சுக்களை ஏற்படுத்த உதவுகிறது. ஆண் சிறுவர்களது வெளியில் இகழ்ச்சியை எதிர்கொள்ளும் அவனுக்கு பெரிய அங்கீகாரத்தை சிறுமிகள் வழங்குகின்றனர்.
அர்ஜியினது ‘வினோதங்கள் வெளித்தெரியத் தொடங்குகையில் அவன் மூச்சு விடுவதற்கென்று இருத ஒரேயொரு வெளியும் அச்சுறுத்தலுக்குள்ளாகிறது. சேலை உடுத்துதல், நகைகள் அணிந்து அழகு பார்த்தல் போன்றவற்றின் மீது அர்ஜிக்கு இருந்த விருப்பங்கள் மிகக் கடூரமாக எதிர்கொள்ளப் படுகின்றன.
அர்ஜியின் சிறுபிள்ளைத் தனமும் அப்பாவித்தனமும் மகிழ்ச்சியும் மெல்ல மெல்ல அற்றுப் போவதை ஓர் மெல்லிய மலரின் இதழ்கள் சருகாகி உதிர்வதையொத்த துயரத்தொனியுடன் எழுதுகிறார் ஷ்யாம் செல்வதுரை.அர்ஜியின் செயல்பாடுகளனைத்தும் கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்காகின்றன. தன் மீதான வன்முறையை அர்ஜி நினைவு கூர்ந்து பதிவு செய்யும் இடங்கள் கவித்துவ பயங்கரமும் சோகமும் நிரம்பியவை: "As I looked at her, I could almost hear the singing of the cane which would be followed by the searing pain." "Soon I would have to turn around and go back to my parent’s house, where Amaachchi awaited me with her thinnest cane, the one that left deep impressions on the backs of our thighs, so deep that sometimes they had to be treated with Gentian Violet. The thought of the cane as it cut through the air, humming like a mosquito made me wince even now, so far from it".

நேரடியான உடல் ரீதியான வன்முறை பற்றிய பதிவுகளை விடவும் உளவியல் ரீதியாக அர்ஜி பலவீனப் படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் அனேகம். சிறில் மாமா "Ey Chelva, Looks like you have a funny one here" (அர்ஜியைப் பற்றி) என்று கூறுமிடம், அர்ஜியின் தாய் நளினி ‘because the sky is so high and the pigs can’t fly’ கூறுமிடமும் அழித்தகற்றவியலாப் புறக்கணிப்பின் மிகைச்சித்திரத்தை* அர்ஜியில் வரைவதை காட்டுகிறார் ஷ்யாம் செல்வதுரை.
நம் கலாச்சாரம் அங்கீகரித்தவாறேயிருக்கும் வன்முறைகளின் மீதான மீள்பார்வையை கோரி நிற்கும் சித்தரிப்புகள் நாவல் நெடுகிலும் வந்து போகின்றன. மேலே கூறப்பட்டவற்றுக்கு மேலாக நாவலில் வரும் விக்டோரியா அக்கடமி அதிபரான ‘பிளக் ரை நம் கலாச்சாரம் அங்கீகரிக்கும் வன்முறையின் இன்னோர் குரூர முகம். அர்ஜியின் முன் வன்முறையும் சவால்களும் வரிந்து கட்டிக் கொண்டு நின்றாலும் அவன் சமரசம் பண்ணிக் கொள்வதில்லை. அவன் தன்னை தொடர்ந்து வலியுறுத்துபனாக இருக்கிறான். வன்முறையை அதன் அறத்தை தனியோர் ஆளாய் எதிர்க்கும் ஒருவன் அவன். நாவலின் பிற பாத்திரங்கள் வன்முறையுடன் சமரசம் செய்து கொள்பவர்களே: இனவேறுபாடு காரணமாக ராதா அத்தை அனிலுடனான தனது உறவைத் துண்டித்துக் கொள்கிறாள், நளினி தனது முன்னாள் காதலனான டாரியை விடுவிப்பதற்கான முயற்சியைக் கைவிடுகிறாள். அர்ஜியின் தந்தை செல்வரத்னம் இன்னோர் உதாரணம்: அழுத்தங்களுக்குப் பயந்து வீட்டில் தன்கியிருந்த ஞெகனைக் கைகழுவி விடுகிறார். அர்ஜி மாத்திரமே வன்முறையை அலட்சியப்படுத்துவதினூடு தன்னை வலியுறுத்துபனாக இருக்கிறான்.
அர்ஜியின் தந்தை அவனது பெண்தன்மையைக் களையவென ஆண்கள் பாடசாலையான விக்டோரியா அக்கடமிக்கு அவனை அனுப்புகிறார். பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடாதிருக்கும் படி அர்ஜி எச்சரிக்கப்படுகிறான். கிரிக்கெட்டினுள் பலவந்தமாகத் தள்ளப் படுகிறான். ஆனால் அனைத்து அழுத்தங்களுக்கும் நேர்மாறாக விக்டோரியா அக்கடமியில் முழுமையான சமப்பாலுறவாளனாக அவன் பரிணமிக்கிறான். விக்டோரியா அக்கடமியில் ஷேகனுக்கும் அர்ஜிக்கும் இடையே இடம்பெறும் நெருக்கமும் உறவின் தருணங்களும் ஒரே சமயத்தில் கிளர்வையும் துக்கத்தையும் வலியையும் ஏற்படுத்தும் வலிமை மிக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன.
இவ்வாறாக நாவலில் பதிவுறும் அர்ஜியின் பதின்ம வயது வரலாறு பல முக்கிய உண்மைகளைக் கவனப் படுத்துகிறது. அர்ஜி சமப்பாலுறவாளனானது அவனை மீறிய சூழ்நிலைகளில் என்பது மீளமீள வலியுறுத்தப் படுகிறது. இது ஏற்கனவே உளவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுவிட்ட போதும் homophobic சூழலில் புரிந்துணர்வை ஏற்படுத்தவல்ல அன்பான கடிதம் போலிருக்கிறது நாவலின் சமூக முக்கியத்துவம்.
Funny Boyக்கு அடுத்து வெளிவந்த Cinnamon Gardens 1920களில் நடக்கும் கதையைக் கொண்டது. தனது சுய அடையாளத்தை வலியுறுத்தவோ ஏற்கவோ முடியாது திணறும் பாலேந்திரன் மீதான விமர்சனமாக, இலங்கையின் ஆதிக்க சாதியினரின் போலிமதிப்பிடுகளையும் hypocrisyயையும் ஆவணப்படுத்தும் பதிவாகவும் நாவல் அமைகிறது.
மூன்றாவது நாவலான Swimming in the monsoon sea மேலைக்கண்ணைத் திருப்திப் படுத்தும் புனைகதையாளராக ஷ்யாம் செல்வதுரையைக் காட்டுகிறது. ஆபத்தான Pop Literature போக்கினுள் ஷ்யாம் இழுக்கப்படுவதை இது குறித்து நிற்கிறதோ என்று ஐயுறுமளவுக்கு நாவலின் தரம் வீழ்ந்திருக்கிறது. Young Adultsக்கான புனைவு என்றே இது விளம்பரப் படுத்தப் படுகிறது. ஆனாலும் இலங்கையின் எதிர்-சமப்பாலுறவு நிலைப்பாட்டை சித்தரிக்கத் தவறவில்லை நாவல்.
*
எனது புழங்கு வெளியெங்கும் பல அர்ஜிக்களை நான் சந்தித்துக் கொண்டேயிருக்கிறேன். தனித் தனியான பெயர்கள் அவர்களுக்கிருந்தாலும் ‘பொன்ட்ஸ் என்கிற பொதுப்பெயரால் அவர்கள் அடையாளப்படுத்தப் படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். நானும் தான் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்: நாணிக்கோணியபடி அவர்கள் திருமணம் செய்து கொள்வதை – பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை – வேலை அது இதென்று திரிவதை – உள்ளே அலைந்துலைந்து செத்துப் போவதை-அவர்களை அவர்கள் எழுதுவதாயில்லை.
இதையெல்லாம் பார்த்துவிட்டு ‘குரலற்றவர்களின் குரலாயிருக்கிறோம் என்று யாராவது பேனையைத் தூக்கி விடுவார்களோ என்றுதான் அஞ்சுகிறேன். அருந்ததி ரோய் கூறுவது போல ‘They are not voiceless. They are deliberately silenced or their voices are preferably unheard’.
குரலற்றவர்களின் குரலாயிருக்கிறோம் என்பதன் வன்முறையைப் புரிந்து கொண்டு நாம் இதன் மீது எழுப்பும் ஆரோக்கியமான விவாதங்கள் மாத்திரமே சூழலின் இறுக்கத்தை தளர்த்தி சமூக இயங்கு தளங்களை சமப்பாலுறவாளர்களின் செயற்பாடுகளுக்கென திறந்து விடும் வல்லமையுள்ளவை.
குறிப்புகள்:
* - சல்மாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள்
1 – மேலும் வாசித்தறிய - * Same Sex Love In India: Readings from History and Literature – Saleem Kidwai, Ruth Vanita
* Facing the mirror: Lesbian Writings From India – Aswini Sukthankar – Penguin India
2 – Funny Boy – Novel by Shyam Selvadurai – Penguins India
பொதுவாக இலங்கை ஆங்கில இலக்கியம் பற்றி தமிழில் கதையாடப் படுவது குறைவு. நம் கவனிப்புக்குரிய பல பிரதிகள் அவர்களிடமிருந்து உருவாகியிருக்கின்றன. ராஜீவ விஜேசின்கவின் Acts Of Faith 83 கலவரத்தைப் பற்றிப் பேசுகிற்து , இந்தியத் தலையீட்டைப் பேசும் அவரது மற்றொரு நாவல் Days Of Despair. ஜீன் அரசநாயகம் ஏற்கனவே கவனப்படுத்தப்பட்டுள்ளார் எனினும் அவர் குறித்துப் பெரிதாகப் பேசப்பட்டதில்லை. இந்த நிலமையே ஷ்யாம் செல்வதுரை கவனிப்புப் பெறாததற்கு காரணமாயிருக்கலாம். இக்கட்டுரையின் நோக்கம் இனப்பிரச்சனை பற்றிய ஒன்றல்ல. மேலும் இலங்கயின் எல்லைக்குள் இந்த நாவலுக்கு அர்த்தம் கற்பிக்கவும் நான் விரும்பவில்லை. ஆனால் பேசப்படாதவை பற்றிய பிரக்ஞையை தூண்டும் ஒரு குறிப்பாக இது அமையட்டும். Funny boy -இல் இடம்பெற்ற காலக் குளறுபடி குறித்து ஏற்கனவே பேசப்பட்டுள்ளது (செல்வா கனகநாயகம் கட்டுரை). ஆனால் பிற விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை.
அர்ஜியின் வளர்ச்சிக்காலப் பின்னணியாக இனவன்முறை சித்தரிக்கப்படுகிறது. நாவலின் இந்த அம்சம் தனியான விவாததுக்குள்ளாக்கப் படவேண்டிய ஒன்று. நாவலினிறுதி அத்தியாயமான ‘The Riot Journal: An Epilouge’ இனை மொழிபெயர்க்கும் யோசனை கூட எனக்கிருந்தது.
நாவல் 83 கலவரத்தை ஓர் தனித்த நிகழ்வாகக் காட்ட முயற்சி செய்யவில்லை. நாட்டில் 83க்கு முன்னும் பின்னும் நிலவிய நிலவிக்கொண்டிருக்கிற பெருவன்முறையின் வெளித்தெரிந்த வெடிப்பாக அது சித்தரிக்கப்படுகிறது. இனக்கலவரங்களின் போது பெரும்பாலான சேதத்தை விளைவித்தது சந்தர்ப்பவாத வன்முறையே என்கிறது நாவல். (எ.கா- பண்டுரத்னே முதலாளியின் மகன்களும் நண்பர்களும் ‘Death to all tamil paraiahs’ என செல்வரத்தினத்தின் கடை ஜன்னல்களில் எழுதுவது.)
விக்டோரியா அக்கடமியில் சல்கொடோ தமிழ் மாணவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகள் பற்றிய விவரணைகளை சிறு பிள்ளைகளுடையதுதானேயெனப் புறமொதுக்கி விட முடியாது.
ஷ்யாம் செல்வதுரை இனங்களுக்கிடையிலான முறுகல்நிலை தலமைகளாலேயே தோற்றுவிக்கப்படுகிறது என்ற கருத்துடையவர் என்பதை அவரது Time (August 25 2003) கட்டுரை உறுதி செய்கிறது. நாவலிலும் இந்தப் பார்வை கணிசமான அளவு வலியுறுத்தப்படுகிறது. சிங்களவனான சல்கொடோவின் தொல்லைகளிலிருந்து அர்ஜியைப் பாதுகாப்பதும் சிங்களவனான ஷேகன் தான். சூழல் சார்ந்த வாசிப்பில் இவை பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. நான் முன்னரே குறிப்பிட்டது போல நாவலின் இனமுறுகல்க் கையாள்கை தனியான விவாததுக்கு எடுத்துக்கொள்ளப் படவேண்டிய ஒன்று.


இரவு வீடு - அதீதன் கவிதை


நாளைடைவில்
இந்த இரவு ஒரு வீடானதும்
அதில் வசிப்பவர்களாக
நாமிருந்து தானே தீரவேண்டும்

நமக்கான கனவுகள்
ஒரு மேஜையொன்றில் பரிமாறப்பட்டிருக்கலாம்
என் நண்பனே
கனவினை நாம் தின்னத் தொடங்குகையில்
பயத்தின் நொடி வீசுவதாக
தயவு செய்து கூறாதிருப்பாயாக
அவ்வாறு கூறுவாயாகில்
வீட்டிற்கு கதவுகள் இல்லாதிருப்பதை
வெகு சீக்கிரமாகவே உணர நேரிடும்

அவ்வீட்டின் எந்த மூலையில்
நீ உன்னைப் புணருவாய்
என் நண்பனே
இல்லாதிருப்பதாய் நாம் நினைக்கும் குறி
தன்னை உணர்த்தும் தருணத்தில்
நம் வீட்டில் ஜன்னல்கள் இல்லாதிருப்பதை
உணர்வோம்
மனவாதையின் உடல் நீட்சியெனத்
துடிக்கும் உன் குறியின் ஸ்கலிதம் விழுங்கித்
தணியும் என் தாபத்தின் தொடக்கத்தில்
எழுந்து நெலியும் சர்ப்பம் தீண்டிய
இரவின் சுவர்கள் நீலமாகப்
பெயர்த்துத் தின்னலாம் சுவர்க் காறைகளை

விழிப்பின் தருணத்தில் காய்ந்த ஸ்கலித்த்தை
தொடைகளில் உணர்ந்து
குளியலறைக்குச் செல்கையில்
உடலில் ஒட்டியிருக்கும்
இரவின் ஸ்கலிதத்தை நாம் உணர்வதில்லை
புன்னகைத்தபடி
கதவுகளைத் திறந்து வெளிவருகிறோம்
பல்லிடுக்குகளில் இருளாய் ஒளிர்கிறது
இரவின் ஸ்கலிதம்

என்ன செய்யலாம் எனது நண்பனே
நமக்குத் தெரியாமலே நம்மைப் புணர்த்தி விலகும்
வசீகரமிக்க இரவின் குறியை


குருதியால் அமையும் தேசம்
வாதைகளால் அழியும் மனிதன்
--அஜீப் பொன்னையா--


நூல் - ம்
ஆசிரியர் - ஷோபா சக்தி
வெளியீடு - கருப்பு பிரதிகள்


மூன்றாம் உலக நாடுகளில் தெடர்ந்து இடம் பெற்றுவரும் போர்கள் அவற்றின் மீள் நிகழ்த்துகைகள் அழிவின் சாத்தியப்பாடுகள் பற்றிய துல்லியமானதும் தவிர்க்கமுடியாதவையுமான எதிர்வு கூறல்களால் இருப்பு அல்லது நிலவுகை சூழப்பட்டிருக்கும் நிலையில் மனித இருத்தல் குறித்து நாமனைவரும் சிந்திக்கவேண்டிய வேண்டியவர்களாக இருக்கிறோம். இத்தகைய சிந்தனை கலை இலக்கியத் தளங்களில் நீட்சியடையும் போது உருவாகும் படைப்புகள் போர் புரட்சி என்பவற்றின் பின்னணியில் மனித இருப்பை ஆராயும் தன்மையுடையவையாக வெளிவருகின்றன. ஈழத்துச்சூழலில் இத்தகைய புனைவுகளை உக்கிரத்துடன் புனைந்து வரும் ஷோபா சக்தியின் சமீபத்திய நாவலான ‘ம் பலவகைகளில் கவனிப்புக்குரிய ஒன்று.
போரின் முன் மனித உயிரின் பெறுமதி இழப்பின் அவலம் இடம் புலம் பெயர் வாழ்வின் அவலம் சமகாலத்தேவைப்பாடு என்று நிறையவே பெருங்கதையாடல்கள் நிகழ்ந்து வரும் காலமிது.போரினதும் அதன் இணை நிகழ்வுகளினதும் நீண்டகால விளைவுகள் தனிமனித அவலங்கள் குறித்த கதையாடல் ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறவே இல்லை.சமகாலத்தேவைப்பாடு என்ற ஓர் எண்ணக்கருவை தாங்களாகவே ஏற்படுத்தி வைத்துக்கெண்டு பிறரையும் அதன்படி செயற்பட வைப்பதே பெரும்பான்மை இலக்கியவாதிகளது நிலைப்பாடாக இருக்கிறது.ஆதிகார மையங்களது ஃபாஸிசக்கரம் நீளமுடியாத தொலைவில் இருப்போர் கூட சுயதணிக்கையுடனேயே கருத்து வெளியிடுவதை வேதனையுடன் பார்க்க வேண்டியுள்ளது.
தியாகம் அர்ப்பணிப்பு வீரம் போன்ற உணர்வு வயப்பட்ட சொற்களை புனிதப் பீடத்தில் ஏற்றிப் பிரச்சாரம் பண்ணிக்கெண்டிருப்பது மையநீரோட்டம். போரினதும் அதன் இணை நிகழ்வுகளினதும் நீண்டகால விளைவுகள் தனிமனித அவலங்கள் குறித்த கதையாடல்கள் அனைத்துமே மையநீரோட்டப் பார்வையின்படி எதிர்க்கதையாடல்கள் தான்.மேற்கூறிய கதையாடல்களின் உக்கிரமான வெளிப்பாட்டிற்கு எழுதப்படாத அதிகாரத்தின் சொல்லப்படாத தணிக்கை விதிகள் ஒத்துப்பேவதில்லை. அத்துடன் இலங்கையில் இத்தகைய வெளிப்பாட்டிற்கான இயங்குதளமும் அரிதான ஒன்றாகவே தெடர்ந்தும் இருந்து வருவது சகிக்க முடியாத ஒன்று.
ம் மை பிரதியியல் (Textual) ஆய்வுக்கும் சூழல்சார் (Contextual) ஆய்வுக்கும் உட்படுத்தும் ஒருவன் கேள்விகளுக்குள் புதையுண்டு போக வேண்டியவனாகிறான்.ஏனெனில்: மக்களின் பாதுகாப்பு சார்ந்து கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்படும் அரசு மக்களின் விடுதலை சுதந்திரம் என்பவற்றுக்கென கட்டமைந்ததாகக் கூறப்படும் தமிழ்த்தேசியவாத அமைப்பு மற்றும் இவ்விரண்டுக்கும் பின்னாலுள்ள கருத்துருவாக்க மையங்கள் என்பவற்றின் மீதான ஆய்வுக்கு நிகரானதே ஒரு ஈழத்து இலக்கியப் பிரதியை ஆய்வுக்குட்படுத்தும் செயற்பாடு. ஆகவேம்மினை ஆய்வுக்குட்படுத்தும் செயற்பாடு என்பது பிறிதொரு வகையில் ஈழத்தின் சமகால அரசியலை ஆராய்வதாக அமையும். ‘ம்மின் விமர்சகன் நாவலின் கதையாக்கத்துக்கும் அமைப்பாக்கத்துக்கும் பங்களிப்பை நிகழ்த்தியிருக்கும் சமூக அமைப்பை பகுப்பதற்கு மனத்தடையற்றிருக்க வேண்டும்.
கட்டமைக்கப்பட்ட ஒழுங்கமைவுத் தோற்றப்பாடு மற்றும் சமநிலையை ஒரு நவீனத்துவப்பிரதி சிதைத்தே ஆகவேண்டும். அத்தனை சிதைவுகள் ரணங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக அதிகார மையங்கள் போர்த்தி விடும் வெண்ணிறப் போர்வையை ‘ம் கிழித்தெறிவதால் அது தன்னை ஒர் உக்கிரமான நவீனத்துவப் பிரதியாக முன்னிறுத்துகிறது.ம்மின் சித்தரிப்பும் கதையாடலும் நாவலைக்கடந்து செல்ல முடியாத நிலையை வாசகனிடத்து ஏற்படுத்துவதை உணர முடிவதால் அது தன்னை ஓர் சிறந்த படைப்பாகவும் முன்னிறுத்திக்கொள்கிறது.
தமிழ்த்தேசியத்துக்கான ஒருங்கிணைவு ஏகப்பிரதிநிதித்துவம் காவியத்தலைவன் ஒன்றிணைந்த இலங்கை போன்ற நுண்ணரசியல் மிகு செற்பிரயோகங்கள் மூலம் சமூக அமைப்பின் அடிப்படை அலகான தனி மனித இருப்பு நூதனமாக மறுதலிக்கப்படுகிறது. மறுதலிக்கப்பட்ட இருப்புக்குச் சார்பான எப்பிரதியும் ‘பயங்கரவாதிகளின் பிரச்சாரப்பிரதி என்றும் ‘துரோகியால் எழுதப்பட்ட பிரதி என்றும் முத்திரை குத்தி ஒதுக்கப்படுகிறது.இவ்வாறு மாற்று வெளிகளை இல்லாதொழித்தும் தனி மனித இருப்பை அர்த்தமற்றதாக்கியும் ஆதிக்க அமைப்புகள் தம்மைப் பாதுகாத்துக்கௌ;ளும் நிலையில் சமூக அமைப்பின் உள்ளார்ந்த அடிப்படை முரண்பாடுகளையும் பிரச்சனைகளையும் பிரக்ஞைக்குட்படுத்தும் ஒரு செயலே சமநிலையைக் ;குலைத்தல் என்பதாகிறது.மேற்புறத்தின் தொகுப்பு நிகழ்வான மௌனத்தை மீறி அதன் நிகழ்த்துகைக்கு அடியில் இருக்கும் புதைக்கப்பட்ட கூச்சல்களையும் அலறல்களையும் வெளிக்கெணர்தல் சமகால அரசியல் இலக்கியப் பிரதியொன்றின் கடமையாகிறது.அக் ;கடமையைத் திறம்படச் செய்யும் ‘ம் சமகாலத்து புனைவுகளில் முதலிடம் பெறும் தகுதியைக் கெண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.
புல விதமான தூண்டல்களை சமூக இருப்பு மீது பிரயேகிப்பதுன் மூலம் தனி மனித இருப்பை அர்த்தமற்றதாக்கும் காரியத்தைச் செய்கின்றன நமது அதிகார நிறுவனங்கள். தனி மனித இருப்பின் உடல்வெளி மற்றும் மனவெளி மீது முறையே ஒடுக்குதலையும் கருத்தியல் ஆதிக்கத்தையும் செலுத்திச் செலுத்தியே அந்த இருப்பை செயல்பாடற்றதாகவும் எந்நிலையிலும் ‘ம் கொட்டக்கூடியவனாகவும் வைத்திருக்கும் உத்தி இன்று நேற்று ஏற்பட்டதல்ல: அதிகாரத்தின் ருசி என்று மனிதனுக்குப் புரிந்ததோ அன்றிலிருந்தே சமூக வெளியினுள் செயற்பட்டவாறே இருக்கிறது இந்த உத்தி.மதம் குடும்பம்; சாதி போன்ற அமைப்புகளை இவ்வுத்திக்கான நிகழ்த்துவெளியாகப் பயன்யடுத்திக்கொள்கிறது அதிகாரம். கலாச்சார சீர்திருத்தச் சட்டவாக்கங்கள் அறவியல் மதிப்பீடுகள் என்பனவும் இந்த வகையினவே.முன்முடிவுகளினதும் நேர்கோட்டு ஆய்வுகளினதும் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இவையனைத்துமே தமது செயற்பாடுகளின் மூலம் தனி மனித இருப்பை மிக மோசமாகச் சிதைக்கின்றன.இவ்வாறு சிதைக்கப்பட்ட தனி மனித இருப்பு வர்க்கம் சாராததாக – மனிதத்தின் சிதைவுற்ற பகுதியாக மாறுகிறது.
கருத்துருவாக்க கருத்தியல் ஆதிக்க நிறுவனங்களின் மதிப்பீடுகளுடன் எந்தவொரு சுயாதீனமான இருப்பும் தன்னை இனங்கண்டு கொள்ள முடியாது. நிறுவனங்களின் மதிப்பீடுகளுடன் தன்னை இனங்கண்டு கொள்ள முடியாத தனி மனித இருப்பு இயல்பாகவே பிறழ்கிறது.பிறழ்ந்த இருப்பின் நிலவுகை தடை செய்யப்பட்டு அதன் இருப்புக் குறித்த தடயம் மறைக்கப்படுகிறது. அதிகார மையங்களின் கைக்கு மீறிய இருப்புகள் பல்வேறுவிதமாக முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன.இதன் மூலம் அவற்றின் சமூகப் பெறுமதி இல்லாதொழிக்கப்படுகிறது: அவற்றின் சமூக இயங்கு வெளி குறுக்கப்படுகிறது.இதன் மூலம் தமது ஸ்தாபன அறத்தை நிலைநாட்டிக் கொள்வதாக அதிகார மையங்கள் எண்ணங் கொள்கின்றன.இது தான் இலங்கையின் முக்கிய அதிகார நிறுவனங்கள் இரண்டினதும் பொது இயங்கியல்.இவை இரண்டினதும் தணிக்கை விதிகளை மீறி உருவாகும் பிரதி – அதிகாரத்தின் இயங்கியலை அராய்வதற்காகவேனும் அந்நியமாதலுக்கு உட்பட்டவனின் கதையாடலை நிகழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறது. இந்த ;அடிப்படையிலேயே ‘ம்மில் பிறழ்வடைந்த இருப்பு கதையாடலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிகாரத்தின் இயங்கியலைக் கேள்விக்குட்படுத்தும் வலிமையுடைய கலக மொழி அந்த இருப்புகளிடம் மாத்திரமே உண்டு.
அதிகார மையக் கருத்துருவங்களும் எதிர்க்கலாச்சாரக் கருத்துருவங்களும் வேறுபட்டவையாகவே இருந்தாலும் அவை பிரிதித்தறிய முடியா உள் இணைப்புக்களைக் கொண்டிருப்பதை எளிதில் இனங்காணலாம். அவ்வாறான உள் இணைப்புக்களில் ஒன்றே அதிகாரத்தின் இயங்கியல் மாற்று இயங்கியலை தோற்றுவிக்கும் செயற்பாடு.இக்கருத்தின் அடிப்படையில் வர்க்கம் சாராத – மனிதத்தின் சிதைவுற்ற பகுதியை உருவாக்குவதும் அதிகார நிறுவனமே என்பது புலப்படும்.’ம்மின் கதை வெளியில் இதற்கான பல உதாரணங்களைக் காண முடியும்.
எதிர்ச்செல்லாடல் என்பதே அபுர்வமான நிகழ்வாகிவிட்ட இச் சூழலில் மனநோயாளிகள் என்று அறியப்படுவோரும் தன்பால்புணர்ச்சியாளர்களும் விபச்சாரிகளும் மறுத்தோடிகள் ஆகி சனாதனக் கருத்துருவங்கள் ஆதிக்க நிலையடைவதை உக்கிரமாகக் கேள்விக்குட்படுத்துகின்றனர்.அதிகாரத்தின் அசிங்கமான இயங்கியலை எதிர்க்க நினைத்தால் அதிகாரத்தால் உருவாக்கப்பட்ட சிதைவுகளை முன்வைப்பது தான் ஒரே வழி. அதிகாரம் முன்வைக்கும் அனைத்துக் கற்பிதங்களையும் நேசகுமாரன் என்ற சிதைவை முன்வைப்பதன் மூலம் தகர்க்கிறது ‘ம்.